Showing posts with label வாழ்த்துரை. Show all posts
Showing posts with label வாழ்த்துரை. Show all posts

Friday, July 25, 2014

அணிந்துரை

எனது நேசச்சுடர் என்ற நூலுக்கு கவியரசர் இளந்தேவன் அளித்த அணிந்துரை
*********************************************************************************
   சோற்றுக்குப் பிறந்தவர்கள் மனிதர்கள் என்றால் காற்றுக்குப் பிறந்தவர்கள் கவிஞர்கள், காற்றுக்குத் தேக வர்ம்பில்லை

சுவாதீ எங்கோ பிறந்த இளங்குயில் அம்மா எலிசபெத் தாமஸ் கருணை வானத்தின் கருப்பு நிலா

குயில் நிலவைப் பாடிய குதூகாலம் தான் “நேசச்சுடர்” என்னும் பெயரில் வெளிப்பட்டிருக்கிறது.

எங்கேயும் நன்மை விளையலாம் என்றால் எவரும் அதைப்பாடலாம் . அப்படி ஒரு சென்னை நகரச் செம்பியன் மாதேவியை, கூவத்துக்கும் புதுகைக் குயில் பாடிப்பரவ எடுத்த முயற்சிதான் நேசச்சுடர்.

அம்மா சரஸ்வதிக்காஅய், அடையாறு ஆலமரத்துக்குப் பின் ந்ழுந்த அதிசய ஆலமரம் அதைப் பார்த்த பரவசத்தில் கூவிய குயில்கள் ஏராளம்.

அடையா நெடுங் கதவும்
அஞ்சல் என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்


என்பார்களே, அதைப்போல அந்தத் தர்மத்தாயிம் தாழ்வாரத்தில் இலக்கியவாதிகளை எப்போதும் பார்க்கலாம்.

அந்த இலக்கிய வானம்பாடிகளில் புதிதாக ‘ஞானஸ்நானம்” பெற்றிருக்கும் புதுகைக் குயிலே சுவாதீ

ஒற்றை வரியே கவித்துவத்தின் முகவரியாக உலாவர முடியும் சுவாதீ அம்மாவைப் பற்றி எழுதிய வரிகளில் முகம் காட்டுகிற முழுக்கவிதை வரி ”முள்ளிலும் முத்தமிழ் பூக்கும் முகம்” என்னும் வரியாகும்.

“முத்தமிழ் பூக்கும் முகம்” என்பது எத்தனை பொருத்தம்?

முள்ளிலும் முத்தமிழ் பூக்கும் முகம் என்பது கற்பனையின் உச்சம்....என்று பிறர் கருதலாம் என்னைப் பொறுத்தவரை, முள்ளிலும் என்பது அம்மா இருக்கும் சூழலைப் பற்றிச் சுவாதீ சொன்ன சுமூக வார்த்தையாகவே தென்படுகிறது.

அம்மாவின் செயலாற்றல் அங்கிருந்து காணப்பட வேண்டிய ஒன்று. அதைச் சுவாதீ பார்த்தது எப்படி? இதோ இப்படி:

சரியெனப்பட்டதைச் சட்டெனச் செய்திடும்
சரித்திர தீபம் நீயே”

அம்மாவின் கனிவு எப்படி வார்த்தை வலையில் அகப்படாதோ, அப்படியே அவரது துணிவும் எழுத்துப் பிடிகளுக்குள் அகப்பட்டதில்லை.

எனவே, உலகளாவிய வீரமகளிரின் பட்டியலைத் தந்து அம்மாவை அந்த வரலாற்று நாயகிகளின் வரிசையில் வைத்துக் காட்டியிருக்கிறார் சுவாதீ

அம்மாவின் ஈரநெஞ்சத்துக்கு இணையிலாச் சான்று, வீரக் கவிஞன் விசயரங்கன். அவனுக்கு உரிய இடம் உயரிய இடம் என்று தீர்மானித்து, நான் அறிமுகப்படுத்திய அளவிலே அதைச் செயல்படுத்திக் காட்டிய “செந்த்ண்மை” அம்மாவுக்கே உரியது.

இதைச் சுவாதீ சொல்லுகிற இடம் கருவிழிகளின் கடைகோடிகளைக் பனிக்க வைப்பது.

கண்மலர் இல்லாத கவிஞானம் ரங்கனும்
கண்டு நீ வாழ்வு தந்தாய்

இந்த வரி அம்மாவின் வற்றாத கருணையின் வரலாற்றுப் பதிவு.

“ஆசை பற்றி அறையலுற்றேன்” என்பான் தேரழுந்தூர்க்காரன். சுவாதீயின் ஆசை என்ன?

மற்றுமோர் பிறவியில்
மங்கை உன் மகளுமாய்
மாது நான் பிறக்க வேண்டும்

அந்த ஆண்டாளுக்கு அரங்கனை அடைய ஆசை. இந்த ஆண்டாளுக்கு எங்கள் வைணவத் தாயின் மகளாகப் பிறக்க ஆசை.

நேசச்சுடர்’ எனும் வாசத் தலைப்பை ஏந்தி வருகிற இந்தப் பனுவல், பாடுபொருளால், சிறப்புற்ற பாட்டுத் தொகுப்பென்க.

பாடிய சுவாதீயும், பாட்டுடைத் தலைவியும் பாராட்டுக்குரியவர்கள்

அம்மாவின் மணிவிழாப் பொழுதில் எழுந்த இந்தநேசச் சுடர், திசைகளுக்கு வெளிச்சம் வழங்குவதாக.

ஏசுவுக்கு அப்போஸ்தலர்கள் பலர், எங்கள் அம்மாவுக்கு அப்போஸ்தகர் ஒருவர் தான். பெயர் கொடைக்கானல் காந்தி. நேசச்சுடர் எங்கள் கொடைக்கானல் காந்தி

அவருக்கும் சத்தமில்லாமல் மனசுக்குள் நுழைந்து விடுகிற சங்கீதக் கண்ணன் கோவி.கண்ணனுக்கும், இந்த நூல் முயற்சியுல் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக என் பாராட்டு

அம்மா ஆயிரங்காலத்துப் பயிர் சுவாதீயும் அந்த வகையில் அம்மாவின் மகளாக வாழ என் வாழ்த்துக்கள்

இன்ப அன்புடன்
இளந்தேவன்
28.04.95
அரசினர் தோட்டம்
சென்னை2






Tuesday, June 17, 2014

அணிந்துரை (என் நூலுக்கு வழங்கப்பட்டது)

இனிக்கும் அமுதம் என்ற என் நூலுக்கு திரு கடவூர் மணிமாறன் அவர்களிடமிருந்து நான் பெற்ற  அணிந்துரை
*******************************************************

முனைவர் கடவூர் மணிமாறன்
க.மு.கல்.மு.மெய்.மு
தமிழ்ப் பேராசிரியர்
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
மாயனூர் 639 108
தீரன் சின்னமலை மாவட்டம்
**********************************************************
   எல்லா அறிவிலும் உயிர்ப்பாக விளங்குவதும் பண்பட்டு இருப்பதுமான ஒரு பகுதி அடக்கி வைக்க முடியாதபடி வெளியிடும் வெளியீடு. அதுதான் பாடல் என்று ஆங்கிலப் பாவலர் வொர்ட்சுவொர்த் கவிதையின் தன்மையை உணர்த்துகின்றார்.

நினைவும் சொல்லும் உணர்ச்சியைப் போர்த்து வெளிப்படும் பொழுதே பாடல் பிறக்கிறது என்கிறார் அறிஞர் ஜான் ஸ்டூவர்ட்மில்

அத்தகைய கவிதையின் ஆழ அகலங்களைக் கண்ட் தெளிந்து நாட்டு நடப்புகளையும் உலகியல் பட்டறிவுகளையும் இணைத்துப் பிறருக்கும் உணர்த்துவது ஒரு பாவலனின் உயரிய குறிக்கோள் எனலாம்.

குழந்தை இலக்கியம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் இன்றைய சூழலில் அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பும் துடிப்பும் கொண்டு இனிக்கும் அமுதத்தை வழங்கியிருப்பவர் பாவலர் சுவாதி அவர்கள்

மரகத வெளிச்சம், முத்துப் பந்தல் கவியின் நெஞ்சம் போன்ற பல்வேறு படைப்புகள் வாயிலாக நன்கு அறிமுகம் ஆன பாவலர் சுவாதீ ஓர் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர்.

மாசறு பணியாம் ஆசிரியப்பணியில் தம்மை ஒப்படைத்துக் கொண்ட நூலாசிரியர், வகுப்பறையில் மட்டும் கற்பிப்பது போதுமானதன்று எனஎண்ணித் தம் படைப்புகள் மூலமாகவும் அத்தகைய அறிவார்ந்த சிந்தனைகளைப் பரப்பும் ஆர்வம் கொண்டுள்ளமை பாராட்டத் தக்கதாகும்

நூலின் தலைப்பு மட்டுமன்று நூலின் உள்ள கருத்துகள் அனைத்துமே இனிக்கும் அமுதமாகச் சுவை பயக்கின்றன

ஒளவையார், காக்கைப்பாடினியார், முடத்தாமக்கண்ணியார், நச்செள்ளையார், வெள்ளிவீதியார், ஒக்கூர் மாசாத்தியார் போன்ற எண்ணற்றோர் சங்ககாலத்திலேயே பெருமை பெற்ர பெண்பாற் புலவர்கள் ஆவர்.

அச்சீர்மிகு மரபில் இற்றைப் பெண்பாவலர்கள் வரிசையில் முன்னணி இடத்தில் இருப்பவர் பாவலர் சுவாதி அவர்கள்

ஆண்டு தோறும் தவறாமல் ஒன்றிரண்டு பாட்டுக் குழந்தைகளைப் பெற்றெடுத்துப் பெருமை சேர்க்கும் தாயுளளம் வாழ்த்தி வரவேற்கத் தக்க ஒன்றாம்

எழுத்தாளர்கள் பல்கிப் பெருகி வரும் காலம் இது. குறிப்பாகப் பாவலர்கள் எண்ணிக்கையோ மிகுந்துவரும் வேளையில் விரல் விட்டு எண்ணத் தகுந்த சிலரில் ஒருவராகப் பாவலர் சுவாதீ விளங்குவது பெருமைக்குரிய செய்தி ஆகும்

இனிக்கும் அமுதம் “தமிழில்” தொடங்கிக் கவிதை படைப்போம் என்பதில் நிறைவு பெறுகின்றது. இடம் பெற்றுள்ள எழுபத்தி மூன்று பாடல்களும் இடத்தை நிரப்ப எழுந்துன அல்ல. இதயத்தை வருடுவதாய் இன்முகங்காட்டி முறுவலிக்கின்றன்.

பத்து அகவைக்கும் குறைந்தோர் படிக்கத் தகுந்த அளவில் எளிமையும் இனிமையும் தவழ அரிய கருத்துப்புதையல்களை அறிவுரைகளாக வழங்கி மகிழ்ந்துள்ளார் ஆசிரியர்.

ஒழுக்கமும் பண்பாடும் அனைத்து நிலைகளிலும் சுருங்கித் தேய்ந்துவரும் இக்காலத்தில் இளைய தலை முறையினரின் ஈரநெஞ்சங்களில் அவற்றை ஆழமாகப் பதியமிடல் காலத்தின் கட்டாயத் தேவையாகும்

நாட்டுப்பற்று, மொழியுணர்வு, ஒருமைப்பாடு, வாழ்வியல் நெறிகள் இன்னோரன்ன பிறவற்றை ஒவ்வொரு பாடல்வரிகளும் எதிரொலிக்கின்றன

அன்பால் உலகை ஆளமுடியும் அறிவால் உலகில் உயரமுடியும் உயர்ந்த வாழ்வுக்கு உண்மையே நாளும் பேசவேண்டும் தேசத்தைப் போற்றி வணங்குவோம். பாச ஒளியை ஏந்துவோம். இவையே நாளும் உயர. நல்வழிகளாம் என்பன போன்ற அறிவுரைகளை அருமையும் நயமும் தோன்றப் படிப்போரிடம் பதிவு செய்கின்றார் நூலாசிரியர்.

மாந்தருள் மாணிக்கம் நேரு, பெருந்தலைவர் காமராசர், வீரப்பெண்மனி ஜான்ஸிராணிவள்ளல் பாரி, கவிமணி போன்ற நாட்டுக் குழைத்த நல்லோர்களைச் சீரிய முறையில் அறிமுகம் செய்து சிறப்புச் சேர்க்கின்ரார்.

உலகம் வாழ , உயர்வுபெற சிக்கனம் நன்குபடி, விளையாட்டு போன்ற பாட்டுத் தலைப்புகளே இளையோரைச் சரியாக வழி நடத்த வேண்டுமென்ற இவரின் விழுமிய பொறுப்புணர்வைப் புடம் போட்ட பொன்னாய் ஒளிரச் செய்கின்றன.

உண்மையான வெற்றிக்கு உழைக்க வேண்டும் , உண்டும் உறங்கியும் வாழ்வதால் ஒருவரும் மதிக்கமாட்டார்கள்: தொண்டில் முன்னணி வகித்துத் தூயவர் என்னும் பெயர் பெற்று விளங்க வேண்டும் என்று இவர் ஆற்றுப் படுத்தும் பாங்கு எவரையும் ஈர்க்கவல்லதாகும்

தோழியைப் பாடுங்கால் தூய தோழமையுணர்வைப் புலப்படுத்தும் பாவலர்,

                            இனிக்க இனிக்க பேசுவாள்
                             இன்னல் தீர்க்கும் நல்லவள்
                             கனியைப் போன்ற கவிதைகள்
                              கருத்தாய் எழுதிக் காட்டுவாள்
என்னும் பாடல் வரிகளில் உயிர் நட்பின் உயர்வைப் போற்றிப் புகழ்ந்து உள்ளம் பூரிக்கின்றார்.

                        நாயும் எனக்குத் தோழன் - குள்ள
                        நரியும் எனக்கு நண்பன்
                        ஈயும் எனக்கு நண்பன் - சின்ன
                         எறும்பும் எனக்குத் தோழன்

என்று பாடிய பாரதியார் அடியொற்றித் தம் பாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து வரும் பாவலர், பசு,  நாய்,  யானை,  எலி,  புலி, கிளி, பல்லி, மான், முள்ளம் பன்றி , சேவல், எறும்பு, ஆகிய உயிரினங்களைப் பற்றி நேசமுடன் பாடி நெஞ்சம் மகிழ்கின்றார்.

குழந்தை, மல்லிகை, பூக்கள் ஆகிய தலைப்புகளில் உள்ள பாடல்களில் இவரும் குழந்தையாகவே மாறிவிடுவதை காண முடிகிறது.

                   ”பெண்மை உயராத நாடதுவும்
                     பெருமை இழக்கும் நாடாகும்”

என்ற இவரின் பெண்களைப் பற்றிய பாடல்வரிகள் “பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டில் மண்ணடிமை தீர்தல் முயற் கொம்பே” என்ற பாவேந்தர் பாடல்வரிகளை நினைவுக்குக் கொணர்கின்றன.

கல்விக்கூடம் சென்று கருத்தாய்ப் படிக்க வேண்டும். கற்றபடியே நிற்க வேண்டும்: கடுமையாக உழைக்க வேண்டும் என்பன போன்ற இவரின் சிந்தனை வரிகள் குறட்பாக்களை வழி மொழிவதாய் அமைந்து சிறக்கின்றன.

இனிக்கும் அமுதம் பாவலர் சுவாதி அவர்களின் தரமான சுவையான தமிழ் விருந்தாகும். குமுக எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் முளைவிடும் வண்ணம் பாட்டு விதைகளைப் பக்குவமாக ஊன்றியுள்ளார்.

தமிழ் கூறுநல்லுலகம் முதிர்ந்த சிந்தனை மிகுந்த இத்தகு இளைய பாவலர்களை ஊக்குவிப்பதும் காப்பதும் நன்றிக்கடனாம்.

அன்பன்
கடவூர் மணிமாறன்
கிருட்டிணராயபுரம்
20.7.1996

Saturday, June 14, 2014

வாழ்த்துரை

இந்தப் பகுதியில் எனக்கு வந்த
 வாழ்த்துக்களை
இதில் பதிவிட நினைத்துள்ளேன்....


எனது நூலுக்கு என் கணவர் எழுதித் தந்த வாழ்த்துரை
************************************************************
மீ.செல்வக்குமார்
நிர்வாக இயக்குநர்
சக்தி குருப் நிறுவனங்கள்
மற்றும்
பாலா டிரேடிங் ஹவுஸ்
புதுக்கோட்டை
**************************


அதிகாலை
சிற்றினங்கள் சிறகு விரித்துப்
பறக்கத் தொடங்குகின்றன...

கண் திறந்து
விடுகிறது
கணினி....

பொழுதுயாவும்
கணினியின்
கலையும்
கட்டங்களுக்குள்
காசைத்தேடி...

காகங்கள்
மரங்கள்
திரும்பும்
மாலையிலும்
மனம்
போராட்டங்களில்
இருந்து
விடுபடுவதாயில்லை
வாழ்க்கை.....

எதனைத்
தேடுகிறோம்...
எல்லாவற்றையும்
தொலைத்துவிட்டு....

விரியும்
காலைக்கு
கட்டியம் கூறும்
விடிவெள்ளி
ரசித்து
எத்தனை நாட்கள்
ஆகிறது.....?

பன்னீர்பூக்கள்
பாதம் பதிய
மார்கழி விடியலில்
நடந்து போன நாட்கள்
ஏன்
மீண்டும் வரவேயில்லை....?

இத்தனை நான் தேடலில்
எத்தனை பெற்றோம்??

ஒன்றுமில்லை
அனுபவங்களைத் தவிர...
கவிதைகளை
ரசிப்பதை விட
படைப்பது கடினம்.....

அது
ஒற்றை உயிரில்
உயிராகும் பிரசவம்...

அந்த வலி
பிறர்
ரசிக்கும் போது
மறைகிறது....

சிலர் சிலாகிக்கும் போது
சிலிர்த்தெழுகிறது...

வாசிக்க மட்டுமே
தெரிந்த
எனக்கு
வாழ்க்கைப்பட்ட
நீ.....!
யோசிக்கவும்
தெரிந்திருக்கிறாய்...!

பூஜிக்க வேண்டியவள்
நீ
(ம்....வேறென்னத்த சொல்ல...?)
எழுது...
எழுது....

அழுது அழுது
வீங்கிப் போன
என்னைப் போன்றவர்களுக்கு
அது
கொஞ்சம்
ஆறுதலாய் இருக்கட்டும்...
அத்தோடு
சுவாதி
உன் கவிதைகள்
இந்த சமூகத்துக்கும்
கொஞ்சம்
மாறுதலாய் இருக்கட்டும்

என்றும்
உன்
செல்வா
*****************************************************************