Tuesday, September 29, 2015

காவிரியின் வளமை


காவிரியின் வளமைஎனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை..(மரபு)(காவடி சிந்து)எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை


நேசமுடன் அன்னையென
நெக்குருகும் காவிரியில்
          சலசல ஓசை வரும்--- மலர்

வாசமுடன் தென்றலது
வண்டமிழாய் பாய்புனலில்

          நலமென மீன்கள் எழும்

காவிரியின் தாலாட்டில்
கண்ணான நெல்மணிகள்
          கவினுற நடம்புரியும்-அந்தப்

பூவிரியின் மண்ணதுமே
பூணுகிற பசுமையில்

          புன்னகையின் தடம் தெரியும்

காவிரியின் வளமையது
காய்த்த கதிர் தோற்றமுடன்

          கழனியில் ஆடிவரும்---அதை
நாவினிலே கூறிவிட
நாற்றெழுதும் பாமரர் வாய்

        நற்றமிழும் ஓடி வரும்

பச்சை நிற சேலை கட்டும்
பொன்மருத வீதிகளில்
          பம்மிப் பம்மி ஓடிவரும்--தென்றல்

இச்சையோடு நித்தம் நித்தம்
இளமாதர் பூந்துகிலை
          தொட்டுத் தொட்டு பேசிவரும்

திண்ணான காளைகளும்
வன்மைமிகு காளையரும்
      வயல் காட்டில் ஆடிவர--அங்கே

பொன்னான நெல்மணிகள்
தன்னான பாடிக்கொண்டு
        தலை சாய்த்து பாடல் தரும்

நெற்காடு தலை சாய்த்து
புற்காடைப் பார்த்து ஒரு
      பூபாள ஓசை தரும்--அந்த

பொன்னான வேளையிலும்
பூவாக த் தமிழ் வந்து
           பன்னீராய் வாசமிடும்

குயிலோசை கேட்டு  நித்தம்
குன்றமே விழித்து விடும்
          கோபுரங்கள் சடசடக்கும்

ஊரெல்லாம் நீர் நிலைகள்
ஒய்யார வயல் சேர்த்து

      ஓவியம் போல் எழுந்து நிற்கும்

உழைபாலே விடியலிட்டு
உண்மையினை தன்னிலிட்டு
        ஊர்கூடி உவகையென்றால்

களைப்பெல்லாம் போக்கி அவர்
கருப்பான நேரத்திலே
      காதலையே தேடிவரும்

ஆற்றல்கள் குவிந்திருக்கும்
அம்புலியோ பார்த்திருக்க

        அம்மானை பாட்டு வரும்


எந்நேரம் இன்பந்தான்
எப்போதும் அன்பேதான்
          உழைப்பு தரும் ஊர் இதுவே

   
வந்தாரை வாழவைத்து
வாழ்வாங்கு வாழ்த்துஎன்று
          வாழ்க்கையினை தானம் தரும்

எந்நாளும் வாழ்த்திடுவோம்
ஏற்றமிகு நாடுஇது
          இன்பத்தையே நிறைத்து நிற்க
**********************************************************


7 comments:

  1. வணக்கம் கவிதை அருமை! வாழ்த்துக்கள்! தங்கள் தளத்திற்கு புதியவன்!

    ReplyDelete
    Replies
    1. tதங்கள் வரவு நல்வரவு ஆகுக...நன்றி...தங்கள் தளத்திற்கு நாளை வருகிறேன்..( அடிக்கடி வருக)

      Delete
  2. வந்துவிழும் சந்தமதில் முந்துகின்ற செந்தமிழால்
    தந்திடுவாள் சொந்தமலர்ச் சீரை - அது
    சிந்தையெலாம் பந்திநிறை முந்திரியாய் வந்திடவே
    இந்தகணம் சொந்தமெனும் பாரை!

    அருமையான சந்தக் கவிதைகள் சிந்தை நிறைகிந்தன.

    போட்டிகளில் வெல்ல வாழ்த்துகள் கவிஞரே!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருமையான சந்த பதில்...நன்றி...நன்றி. தமிழ் அழகு

      Delete
  3. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
  4. கவிதையைக் கண்டேன், ரசித்தேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு : → http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete