Wednesday, February 19, 2014

எழுந்து வா சகோதரி (கவிதை)










விதியென்று
வீட்டுக்குள் உறங்கும் பெண்ணே!
வெளியேவா!
உனக்காகத்தான்
உலகம் காத்திருக்கிறது!

சிறையைவிட்டு வந்து
செயற்கைக்கொளுக்குச் சென்றுவா
அணு உலைகளை
ஆராய்ச்சி செய்து கொடு
அடிமைத்தனத்தை விடுத்து
அகிலத்தை
ஆராய்ச்சிச்செய்ய வா
அரிசிச் சோற்றை ஆக்க மட்டுமல்ல!
விண்கலம் வரை உனது
விரல்கள் போகட்டும்!

எழுந்து வாபெண்ணே
நீ
அடங்கிப் போனது போதும்
முரட்டுப் பிடிகளில்
முடங்கிப் போனது போதும்
நாளைய உலகை
நீ தான்
உருவாக்க வேண்டும்

குழந்தை சுமக்க மட்டுமல்ல
உனது கருவறை
குவலயம் படைக்கும்
திருமறை நீதான்
நீ....நீயேதான்....
பாரதத்தின் பாதை....

வா
பதுங்கிக் கிடந்ததும்
ஒதுங்கிப்போவதும் தான்
ஒழுக்கம் என்ற
அழுக்கு சிந்தனையை விட்டுவிடு!

சடங்குகளுடன் சரிந்து போன நீ
சட்டம் எழுத வா
இருண்டு போன நெஞ்சங்களில்
உன்
எழுத்துக்கள் ஒளிரட்டும்
பாழடைந்து போனவைகள்
உன்னைக் கண்டு
பயந்து ஒதுங்கட்டும்

இப்போது பார்
உன்னை
ஒதுக்க முயன்றவர்கள்
உன்
பின்னே வருகிறார்கள்
உன்
கண்களின் ஒளியில் தான்
கதிர்கள்
கனல் கக்க வேண்டும்
உன்
கால்களின் பாதையில் தான்
கானக முட்களுக்கு
கண் தெரிய வேண்டும்
உன்
கைகளின் எழுத்துக்களில் தான்
உலகமே உன்னதப்பட வேண்டும்

வா பெண்ணே வா!
உலகம்
உனக்காகத்தான் காத்திருக்கிறது!
****************************************

2 comments:

  1. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நம்பிக்கை தரும் வீரமிகு வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete