Saturday, October 10, 2015

சான்றோன் எனக் கேட்டதாய்

இன்று சின்னவள் பள்ளியில் பெற்றோர் சங்கக் கூட்டம். ( வேறென்ன? நம் குழந்தைகளின் படிப்பைப் பற்றி நமக்கே சொல்வார்கள்) புதுகையில் அவள் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் எல்லோருமே என் தோழிகளாக தோழர்களாக இருந்ததால் எப்போதும் சின்னவளுக்கு கவனிப்பு அதிகம். யாரையும் தன் அன்பால், நேசத்தால், மனிதநேயத்தால் ஈர்த்து விடும் பாங்கை தனக்குள் இருக்கும் காந்த சக்தியாய்க்கொண்டவள் என்பதால் இது வரை எனக்கு முறையீடு (கம்ப்பிளைண்ட்) வந்ததில்லை. பகைவர்களையும் நேசிக்க வைக்கும் பாங்கு ஒரு சிலருக்கே அமையப் பெறும். அது அவளுக்குள் இயல்பாய்.....

சில சமயம் நம்மையும் மிரள வைப்பாள். கோபத்தைக் கோபமாக க்காட்டி பழக்கப் பட்ட எனக்கு கோபத்தையும் அன்பாகவே பிரதிபலிக்க முடியும் என்று எனக்குக் கற்றுத்தந்தவள் அவள் தான்.

சரிதான். உள்ளூரில் என் நிழலும் அவளுடன் கூடவே வரும்.ஆனால் இந்தச் சென்னையில் என்ன செய்வாள்? அதிகம் யாருடனும் பேசுவதுமில்லை. என்று அவள் மீது எப்போதும் ஒரு குறை இருக்கும். பேசினால் தான் நம் திறமை வெளிப்படும் என்றில்லை. எங்கே பேச வேண்டுமோ அங்கே பேசுவேன் என்பாள் அப்போதும் அமைதியாக.

இன்று காலை 8 முதல் 12 மணி வரை மட்டுமே பெற்றோர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தோம். எனவே நான் ஒரு 9 மணிக்குப் போய் முதலிலும் அல்லாமல் கடைசியிலும் அல்லாமல் எலோரையும் பார்த்து வருவது என்று திட்டமிட்டிருந்தேன். ( அவளும் புதுகையின் பதிவர் திருவிழாவிற்குப் போய் விட்டதால் எனக்கு எல்லா ஆசிரியர்களையும் பார்த்து விட வேண்டுமே என்ற அச்சமும் தவிப்பும் கவலையும் கூடிக் கொண்டே போனது . இது முதல் கூட்டம் வேறு

முதலில் அவளுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்த்து விட்டு பின் அடுத்த ஆசிரியர்களைப் பார்க்கலாம் என்று நினைத்துச் சென்றேன்.
முதலில் தயக்கத்தோடு பெருத்த கூட்டத்தில் ஒரு நீண்ட வரிசையில் நின்றேன்.

  உங்கள் பிள்ளை இதில் கவனமில்லை அதில் நன்றாகச் செய்யவில்லை என்று ஆசிரியர்களும் என்பிள்ளை எப்போதும் டி.வி தான் பார்க்கிறான் என்று பெற்றோர்களும் சொல்லிக் கொண்டே இருந்தனர்.மறைமுகமாக ஆசிரியர்கள் பெற்றோர்கள்தான் பிள்ளைகள் படிக்காமைக்குக் காரணம் என்றும் ,பெற்றோர்களோ ஆசிரியர்கள் தான் அவர்களைப் படிக்க வைக்க வேண்டுமென்றும் மறைமுகத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.

நானும் தலைமை ஆசிரியர் என்பதால் பெற்றோர்களின் உளப்பாங்கை எண்ணி வியந்தவாறே நின்றேன். நான் எப்போதும் என் மகள்களைப் பற்றிக் குறைகளை கூறுவதில்லை. ஏனெனில் என் வளர்ப்பு முறையில் தான் குறை இருக்குமே தவிர அவர்களின் அணுகுமுறையில் அல்ல என்பதை நான் உணர்ந்தேன் என்பதை விட அவளைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை அதனால் நான் அதைச் சொல்லவும்வாய்ப்பு இல்லை. அநாவசியமாக போன்செய்ய மாட்டாள். பின் நான் எதைத்தான் சொல்ல முடியும்?

ஆனால் எந்நேரமும் புத்தக வாசிப்பு அவளிடம் அதிகம் உண்டு.. தேர்வுக்குத் தயார் ஆகும் போதும் கூட பொதுப் புத்தகங்களை அவள் வாசிப்பதை விட வில்லை. நல்ல மதிப்பெண்கள்பெறுவதால் நானும் எதிலும் கட்டாயப்படுத்துவதில்லை.

எரியும் பனிக்காடு, அகம் புறம் அந்தப்புரம், காவல் கோட்டம்,சிறிதுவெளிச்சம், தேசாந்திரி, இந்திய வரலாறு, ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா, முகில், பா.ராகவன், பூமணி, ராஜுமுருகன், மதன்,மாரிசெல்வராஜ் , என்று பனிரெண்டு வயதில் அவள் வாசிப்பின் ஆழ அகலங்கள் என்னை பெரிதும் கவர்ந்ததும், நேசித்ததும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

எதையும் தீர்க்கமாய் சிந்திப்பதும், அழுத்தமாய் வெளியிடுவதும் அவள் பாங்கு என்பதை அவளிடம் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் பேசினால் புரியும். ( இந்தக் கோபக்காரிக்குஇப்படி ஒரு குணசுந்தரியா? என்று நானே பல சமயங்களில் வியந்திருக்கிறேன்)

சரி விஷயத்திற்கு வருகிறேன். இன்று பள்ளியில் இயற்பியல் ஆசிரியர்  மூன்றாவது மாடியின் நான்காவது அறையிலும், வேதியியல் ஆசிரியர் வேறு ஒரு கட்டிடத்தின்  மூன்றாவது மாடியிலும், உயிரியல் ஆசிரியர் வேறு கட்டத்தின் ஐந்தாவது மாடியில் நான்காவது அறையிலும், கணித ஆசிரியர் மூன்றாவது தளத்திலும் ஆங்கில ஆசிரியர் தரை தளத்திலும், தமிழ் ஆசிரியர் ஆசிரியரின் அறையிலுமாக அமர்ந்து அவர்கள் கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள். மன்னிக்க.பெற்றோர்களுடன் வாத விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர்.( நல்ல வேளை அவள் பள்ளியில் ஐந்தாவது மாடியோடு நிப்பாட்டிக் கொண்டார்கள்...இல்லையேல் என் பாடு...?)

அவள் வகுப்பாசிரியரும் உயிரியல் ஆசிரியருமான தனலட்சுமியை போன மாதம் வந்த போது என் தோழியாக்கிக் கொண்டிருந்தேன். எனவே என்னைப் பார்த்ததும் ஒரு மென் புன்னகையும், அழகிய சிறு தலையாட்டுதலையும் தந்து என்னை சைகையால் அமரச் சொன்னார். பயந்து போய் அமர்ந்தேன். இரண்டொருவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, என்னை அழைத்தார்.

எவ்வளவு நல்ல பிள்ளை தெரியுமாங்க ராகசூர்யா, அவளாக சமைத்து, அவளாக கிளம்பி, அவளாக பாடங்களைத் தயாரிக்கிறாள். அவளிடம் தான் ஒரு பேச்சாளர் என்ற கர்வம் இல்லை. ( அய்யோ அவள் பேச்சாளரா????!!!!)
இப்படி ஒரு அமைதியான பிள்ளையை நான் பார்க்கவில்லை. நிறைய புத்தகங்கள் வாசிக்கிறாள். அநேகமாக இந்தப் பள்ளியில் உள்ள நூலகத்தை அவள்தான் திறந்து கண்ணுற்று தூசி தட்டிப் படிக்கிறாள். எல்லோருடனும் நட்பாகவும் அன்பாகவும் இருக்கிறாள். நான் அவளுடன் தான் சேர்ந்து சாப்பிடுவேன். அவள் வைத்த குழம்பு, கூட்டு என்று எனக்கும் கொடுப்பாள்.( மறுபடியும் ஒரு அய்யோ! உங்களுக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லை.நீங்கள் இன்சூரன்ஸ் போட்டுருக்கீங்களா??) என்று ஏதேதோ சொன்னார். கடைசியாய் ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க. இப்படி லட்சத்தில் ஒருத்தி தான் இருப்பாள். அந்த ஒருத்தியும் உங்கள் மகளாய் இருக்கிறாள். எனக்கும் அவள் மகள் தான் என்றார். கேட்டுக் கொண்டிருந்த 2 அம்மாக்கள் கேட்டாயா? அவங்க பிள்ளைய பெத்தாங்க. நான் பெரண்டையப் பெத்தேன் என்றது சிறியதாய் என் காதுகளில் கேட்டது.
அங்கிருந்து மகிழ்ந்த வண்ணம் கணித ஆசிரியரைப் பார்க்கப் போனேன். ராகசூர்யா அம்மா அவள் புதுகை சென்றுள்ளாள் என்று சொல்ல ஆரம்பித்ததும் அவரே சொன்னார். பதிவர் திருவிழாக்குப் போயிருக்கிறாள். நாளை விமானத்தில் வந்துவிடுவாள். அப்படித்தானே அன்றாள். இவரும் சற்று புகழ்ந்தார்.
இயற்பியல் ஆசிரியர் என்கைகளைப் பிடித்துக் கொண்டார். அம்மா வாங்க. நல்லா இருக்கீங்களா? அவள் நேற்று பதிவர் திருவிழாக்கு புதுகை போய் விட்டாளா? என்று கேட்டுக் கொண்டே சில வருடங்களில் இது போன்ற மாணவிகளை நாங்கள் சந்திப்போம். அப்படி இந்த வருடம் நான் ராகசூர்யாவை சந்தித்திருக்கிறேன். என்றார்.
இதற்குள் பள்ளியின் முதல்வர் அம்மா ராகசூர்யா அம்மா போகும் போது என்னை சந்தித்து விட்டுச் செல்லுங்கள் என்றார். இப்போது எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.
ஒரு வழியாக அந்த மாடி, இந்த மாடி என்று ஓடி, ஓடோடி, முதல்வர் அறைக்குவந்தேன். உட்காருங்கள் என்றவர்.என்னை நட்போடுதான் பார்த்தது போல் இருந்தது. அதனால் கொஞ்சம் ஆசுவாசப் பட்டேன். நீங்கள்பெரிய பேச்சாளராமே, கல்கியில் தொடர் எழுதுகிறீர்களாமே? கலைஞர் டீவியில் கவிதைத் தொடர் வாசிக்கிறீங்களாமே. எங்கள் பள்ளிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பு எடுக்க வேண்டும். உங்கள் மகள் என் நல்ல மாணவி என்று கை பிடித்துக்குலுக்கினார். ஒரு வழியாக ஒரு மாபெரும் இறுக்கத்திலிருந்து தப்பித்தது போல் இருந்தது. அவள் மதிப்பெண்கள் வெறும் 1000 தான் எடுத்திருக்கிறாள். அதனால் விடிய விடிய எல்லோரும் என்னைத் திட்டப்போகிறார்கள். என்றுநினைத்து நினைத்து பயந்தேன். ஆனால் ஏனோ ஒருவர் கூட அவளுடைய மதிப்பெண் பற்றிச் சொல்லவும் இல்லை கேட்கவும் இல்லை. எல்லாவற்றிலும் என் கையெழுத்து மட்டும் பெற்றுக் கொண்டார்கள்.

எங்கள் ஊர்க் கவிஞர் ஒருவர் முதல் மதிப்பெண் வாங்க வேண்டாம் மகளே என்று சொல்வார். அதனை புத்தகமாகவும் போட்டுள்ளார். ஆனால் என்னால் அப்படி சொல்ல இயலாது.ஏனெனில் இந்த சமூகமும், அரசும் வெறுத்து ஒதுக்கும் , புறக்கணிக்கும்,ஓ.சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது அவளுடைய சான்றிதழில் இருப்பதால் உள்ள பயம் தான் அதற்குக் காரணம். சமூகத்தில் அங்கீகாரம் என்பது மதிப்பெண்கள் தான் என்ற என் எண்ணத்தை தவிடு பொடி ஆக்கிவிட்டாள்.

நானாக மெதுவாக அவள் ஆயிரம் தான் மதிப்பெண்கள் பெற்றுள்ளாள் என்பதைத் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.ஒருவேளை அவர்கள் மறந்து போய் விட்டார்களோ என்று நான் நினைத்தேன்.

அவள் பெரும் முயற்சிக்காரி. நல்ல பெண். அடுத்த முறை பாருங்கள் அவள் 1100 எடுப்பாள் என்றார் அவளின் வகுப்பு ஆசிரியர். எனக்கு முந்திக்கொண்டு. எனக்கே வெட்கமாய் போய் விட்டது. அவர்களெல்லாம் வைத்த நம்பிக்கையை நான் வைக்க வில்லையோ என்று.

மேல் வகுப்பிற்கெல்லாம் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப் பட்டுள்ளார்கள். எல்லோருமே நன்றாகப் பேசினார்கள். இந்த மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தந்ததற்காக நான் தான் அவளுக்குக் கடன் பட்டது போல் தோன்றுகிறது.
இருந்தாலும் இனி அதிகாலையில் எழுந்து படிக்க வைக்க வேண்டும். இரவும் சற்று நேரத்தைக் கூட்டி படிக்க வைக்க வேண்டும்.
அவளுக்காக நீங்களும் பிரார்த்தியுங்களேன்.

( அவளைப் பற்றி எழுதித் தான் அவள் அப்பா முதல் பரிசு பெற்றிருக்கிறார்)

( இரண்டு விஷயம் நான் ராகசூர்யாவிடம் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் உன்னை நல்ல பிள்ளைனு சொல்றாங்களே, எல்லோருக்கும் என்ன கொடுத்தாய்???இரண்டு அடுத்த முறை உன் ஆசிரியர் விருப்பப்பட்ட படி 1100 வாங்கி விடுவாயா??)

1 comment:

  1. ஆஹா!! எவ்வளவு நல்ல பிள்ளை! ராகசூரியாவிற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete