Tuesday, January 20, 2015

கனவுக் காட்சிகள் (தீபம் இதழில் எனது தொடர்)


கனவுகள்

கனவுகள்....இதைப்பற்றி பலரும் பலவிதமான  கருத்துக்களை தங்களுக்குத் தோன்றிய விதத்தில் கூறியிருக்கின்றனர். ஆனால் அதற்கென்று ஒரு விதி, வரைமுறை, வரையறை போன்றவை  அறவே இல்லை.
வரலாற்றில் பார்த்தோமானால், பாபிலோனியர்கள் தெய்வத்திடமிருந்து வரும் செய்திகளே கனவுகள் என்றனர். எகிப்தியர்கள் கடவுளின் செய்தியாகக் கருதினர். ஆசியர்கள் எதிர்காலத்தை எடுத்துரைக்கும் வழி என்றார்கள். கிரேக்கர்கள் நோய் போன்றவற்றுக்குத் தீர்வு தரும் ஆய்வு எனப் பார்த்தார்கள். ஜப்பானியர்களோ தெய்வத்தின் ஆசிகள் என்றே கூறினர்.
கனவுகளைப் பற்றிய கருத்துகள் இவை என்றால்கனவுகள் எப்போது ஏற்படுகின்றன  என்பது பற்றியும் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. கனவுகள் தூங்கியபின் 30 முதல் 90 நிமிடங்களுக்குப் பிறகே வரும் என்றும், அப்போது அட்ரீனலின் ஹார்மோன் அளவு அதிகமாகும் என்றும் ஆய்வுகள் சொல்கிறது.
சிக்மெண்ட் ஃப்ராய்டு எழுதிய இண்டெர்ப்ரெடேஷன் ஆஃப் டிரீம்ஸ் ( interpretation of dreams)ம் , ஆல்பிரட் ஆட்லர் மற்றும் கார்ல் ஜங்க் எழுதிய நூல்களும், கனவுகள் எவ்வளவு ஒன்றியிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்.
1321 ல் காலமான பிரபல எழுத்தாளர் தாந்தோ டிவைன் என்ற காமெடி நூலை எழுதிவிட்டு இறந்து போனார். மகன் ஜாகப்போ வறுமையால் வாடிய போது கனவில் தொன்றி அந்த நூல் உள்ள இடத்தைக்கூறி இன்னாரிடம் கொடுத்து பணம் பெற்று வாழ் என்று கூறியதாகவும் அதன் பின் “ஜாகபோ” நினைத்துப் பார்க்க இயலாத அளவு உயர்ந்ததாகவும் உண்மைக்கதை இருக்கிறது.
கம்பர் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு கூர்மையான ஆயுதத்தால் நிலத்தைப் பண்படுத்திக் கொண்டிருக்கும் உழவனைப் பார்த்து விட்டு வரும் வழியெல்லாம் இதென்ன கருவி என்று குழம்பிப் போய் வீடு வந்தாராம் . அப்போதுதூங்கிக் கொண்டிருந்த மகன் அம்பிகாபதி , அந்தக் கருவியின் பெயர் கோடரி என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினார் என்றும் ஒரு செய்தி உண்டு.
நமது இந்தியாவில் அமானுஷ்யம் கலந்து பல கனவுக்கதைகள் உலவினாலும், கனவுகளின் பலன்கள் பற்றி அறிவிப்பதும் தெரிவிப்பதும் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்படுகிறது. ஆலயம், அரண்மனை, கிளி, வாழை இலை, பிறரை அலங்கரித்தல் . நிலவு, விவசாயி உழுதல், வானவில், சிறுகுழந்தை, பாம்புகடித்து ரத்தம் வருவது போன்றவை நல்ல கனவுகள் அதாவது உடனடியாக நமக்கு நன்மைகள் வருகிரது என்று அறிவிக்கக் கூடிய கனவுகள் என்றும் பூனை, தேனி, எறும்பு, எலி, குடி, பசு விரட்டுதல், புயல், குதிரை விழுதல் போன்ற தீக்கனவுகள் என்றும் கூறப்படுகிரது.
பொதுவாக இரவு 6 முதல் 8 வரை கனவு வந்தால் 1 வருடத்திலும்,  8 முதல் 10 மணிவரை வந்தால் 3 மாதத்திலும், 10 முதல் 1 மணிக்குள் காணும் கனவுகள் ஒரு மாதத்திலும்,  1 முதல் 3 என்றால் 10 தினங்களிலும், 3 முதல் 6 மணிக்குள் கண்ட கனவுகள் உடனேயும் பலிதமாகும்  என்கிறார்கள் . அதேசமயம், பகலிலே கனவு வந்தால் பலிக்கவே பலிக்காது என்று சத்தியம் செய்கிறார்கள்
காசி நகர் புலவர் பேசும் உரையை காஞ்சியில் கேட்க வேண்டும் என்று பாரதி கூறியதும் ஒரு அழகிய எதிர்காலக்கனவு. பட்டனைத் தட்டி விட்டா தட்டுல ரெண்டு இட்டலியும் பக்கத்துல காப்பியும் வந்துடணும் என்ற கலைவாணரின் கனவு, வெகு சீக்கிரம் பலிக்கக்கூடிய  ஒன்றாகவே தெரிகிறது. பட்டனைத் தட்டினால், இப்போது காபி வருவதைப் பார்க்கிறோம். அடுத்து இட்டலியும் வரக்கூடும்.
 அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டி...’ என்ற ஔவையின் கனவு பிரமிப்பூட்டக் கூடியது. அணுவைக் கண்டேபிடித்திராத நாளில், அதை துளைக்க நினத்தது மட்டுமல்ல; அதற்குள் எழுகடலை நிரப்பப் பார்த்தாளே... அது ராட்சஸக் கனவு.
அந்த அணுவை நூறு துண்டுகளாக்கி , அநதப் பரமாணுக்கு கோண்என்று நாமகரணம் செய்வித்த கம்பனையும் இங்கே நினைவுகூர வேண்டியிருக்கிறது.வாழும் முறையைப் பற்றி பல்வேறு அதிகாரங்களை அடுக்கிய வள்ளுவனையும் கனவு விட்டுவிடவில்லை. தன் பங்குக்கு அவனும் கனவு நிலையுரைத்தல் என்றொரு அதிகாரத்தை வழங்கியிருக்கிறான்.
 திரைப்படங்களில் பல வெள்ளை உடை தேவதைகளின் நடுவே தலைவனும் தலைவியும் நடனமாடுவதே மக்களுக்கு பிடித்த கனவுகள். பென்சீனின் வடிவம் கனவில் உணரப்பட்டதுதான் என்பதையும் அறிவியல் வழியாகவே அறிகிறோம்.
கனவு சார்ந்தே ஜோதிடவியல், உளவியல், அறிவியல், புவியியல், வானவியல், குவாண்டம் இயற்பியல்...என்று பல இயல்கள் உருவானதும் கனவுகளுக்குக் கிடைத்த மேன்மை. ‘ தூங்கும் போது வருவதல்ல கனவு நம்மைத் தூங்க விடாமல் செய்வதே கனவுஎன்றார் மேதகு ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
சரி; கனவுகள்  எப்படி வரும்? வண்ணமயமாக வருமா? என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டது. ஆனால், கனவுகள் வாழ்வை வண்ணமயமாக்கும் என்பது மட்டும் உண்மை.
ஆக்கல், காத்தல், அழித்தல் என கனவுகளுக்கு  பல பரிமாணங்கள் உண்டென்றாலும், எதிர்மறைக் கனவுகளுலும் நேர்மறைப் பலன்கள் சொல்லி நம்மை ஆற்றுப்படுத்தியதென்னவோ உண்மை

அப்படி ஒருவரின் எதிர்மறைக்கனவு , இன்னொருவருக்கு நேர்மறைகனவு ஆகிவிடுகிறது. அது எப்படி  சாத்தியம்? அதை அடுத்த இதழில்.

1 comment:

  1. ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    வள்ளுவரின் கனவு என்ன...?

    ReplyDelete