Tuesday, June 17, 2014

அணிந்துரை (என் நூலுக்கு வழங்கப்பட்டது)

இனிக்கும் அமுதம் என்ற என் நூலுக்கு திரு கடவூர் மணிமாறன் அவர்களிடமிருந்து நான் பெற்ற  அணிந்துரை
*******************************************************

முனைவர் கடவூர் மணிமாறன்
க.மு.கல்.மு.மெய்.மு
தமிழ்ப் பேராசிரியர்
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
மாயனூர் 639 108
தீரன் சின்னமலை மாவட்டம்
**********************************************************
   எல்லா அறிவிலும் உயிர்ப்பாக விளங்குவதும் பண்பட்டு இருப்பதுமான ஒரு பகுதி அடக்கி வைக்க முடியாதபடி வெளியிடும் வெளியீடு. அதுதான் பாடல் என்று ஆங்கிலப் பாவலர் வொர்ட்சுவொர்த் கவிதையின் தன்மையை உணர்த்துகின்றார்.

நினைவும் சொல்லும் உணர்ச்சியைப் போர்த்து வெளிப்படும் பொழுதே பாடல் பிறக்கிறது என்கிறார் அறிஞர் ஜான் ஸ்டூவர்ட்மில்

அத்தகைய கவிதையின் ஆழ அகலங்களைக் கண்ட் தெளிந்து நாட்டு நடப்புகளையும் உலகியல் பட்டறிவுகளையும் இணைத்துப் பிறருக்கும் உணர்த்துவது ஒரு பாவலனின் உயரிய குறிக்கோள் எனலாம்.

குழந்தை இலக்கியம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் இன்றைய சூழலில் அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பும் துடிப்பும் கொண்டு இனிக்கும் அமுதத்தை வழங்கியிருப்பவர் பாவலர் சுவாதி அவர்கள்

மரகத வெளிச்சம், முத்துப் பந்தல் கவியின் நெஞ்சம் போன்ற பல்வேறு படைப்புகள் வாயிலாக நன்கு அறிமுகம் ஆன பாவலர் சுவாதீ ஓர் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர்.

மாசறு பணியாம் ஆசிரியப்பணியில் தம்மை ஒப்படைத்துக் கொண்ட நூலாசிரியர், வகுப்பறையில் மட்டும் கற்பிப்பது போதுமானதன்று எனஎண்ணித் தம் படைப்புகள் மூலமாகவும் அத்தகைய அறிவார்ந்த சிந்தனைகளைப் பரப்பும் ஆர்வம் கொண்டுள்ளமை பாராட்டத் தக்கதாகும்

நூலின் தலைப்பு மட்டுமன்று நூலின் உள்ள கருத்துகள் அனைத்துமே இனிக்கும் அமுதமாகச் சுவை பயக்கின்றன

ஒளவையார், காக்கைப்பாடினியார், முடத்தாமக்கண்ணியார், நச்செள்ளையார், வெள்ளிவீதியார், ஒக்கூர் மாசாத்தியார் போன்ற எண்ணற்றோர் சங்ககாலத்திலேயே பெருமை பெற்ர பெண்பாற் புலவர்கள் ஆவர்.

அச்சீர்மிகு மரபில் இற்றைப் பெண்பாவலர்கள் வரிசையில் முன்னணி இடத்தில் இருப்பவர் பாவலர் சுவாதி அவர்கள்

ஆண்டு தோறும் தவறாமல் ஒன்றிரண்டு பாட்டுக் குழந்தைகளைப் பெற்றெடுத்துப் பெருமை சேர்க்கும் தாயுளளம் வாழ்த்தி வரவேற்கத் தக்க ஒன்றாம்

எழுத்தாளர்கள் பல்கிப் பெருகி வரும் காலம் இது. குறிப்பாகப் பாவலர்கள் எண்ணிக்கையோ மிகுந்துவரும் வேளையில் விரல் விட்டு எண்ணத் தகுந்த சிலரில் ஒருவராகப் பாவலர் சுவாதீ விளங்குவது பெருமைக்குரிய செய்தி ஆகும்

இனிக்கும் அமுதம் “தமிழில்” தொடங்கிக் கவிதை படைப்போம் என்பதில் நிறைவு பெறுகின்றது. இடம் பெற்றுள்ள எழுபத்தி மூன்று பாடல்களும் இடத்தை நிரப்ப எழுந்துன அல்ல. இதயத்தை வருடுவதாய் இன்முகங்காட்டி முறுவலிக்கின்றன்.

பத்து அகவைக்கும் குறைந்தோர் படிக்கத் தகுந்த அளவில் எளிமையும் இனிமையும் தவழ அரிய கருத்துப்புதையல்களை அறிவுரைகளாக வழங்கி மகிழ்ந்துள்ளார் ஆசிரியர்.

ஒழுக்கமும் பண்பாடும் அனைத்து நிலைகளிலும் சுருங்கித் தேய்ந்துவரும் இக்காலத்தில் இளைய தலை முறையினரின் ஈரநெஞ்சங்களில் அவற்றை ஆழமாகப் பதியமிடல் காலத்தின் கட்டாயத் தேவையாகும்

நாட்டுப்பற்று, மொழியுணர்வு, ஒருமைப்பாடு, வாழ்வியல் நெறிகள் இன்னோரன்ன பிறவற்றை ஒவ்வொரு பாடல்வரிகளும் எதிரொலிக்கின்றன

அன்பால் உலகை ஆளமுடியும் அறிவால் உலகில் உயரமுடியும் உயர்ந்த வாழ்வுக்கு உண்மையே நாளும் பேசவேண்டும் தேசத்தைப் போற்றி வணங்குவோம். பாச ஒளியை ஏந்துவோம். இவையே நாளும் உயர. நல்வழிகளாம் என்பன போன்ற அறிவுரைகளை அருமையும் நயமும் தோன்றப் படிப்போரிடம் பதிவு செய்கின்றார் நூலாசிரியர்.

மாந்தருள் மாணிக்கம் நேரு, பெருந்தலைவர் காமராசர், வீரப்பெண்மனி ஜான்ஸிராணிவள்ளல் பாரி, கவிமணி போன்ற நாட்டுக் குழைத்த நல்லோர்களைச் சீரிய முறையில் அறிமுகம் செய்து சிறப்புச் சேர்க்கின்ரார்.

உலகம் வாழ , உயர்வுபெற சிக்கனம் நன்குபடி, விளையாட்டு போன்ற பாட்டுத் தலைப்புகளே இளையோரைச் சரியாக வழி நடத்த வேண்டுமென்ற இவரின் விழுமிய பொறுப்புணர்வைப் புடம் போட்ட பொன்னாய் ஒளிரச் செய்கின்றன.

உண்மையான வெற்றிக்கு உழைக்க வேண்டும் , உண்டும் உறங்கியும் வாழ்வதால் ஒருவரும் மதிக்கமாட்டார்கள்: தொண்டில் முன்னணி வகித்துத் தூயவர் என்னும் பெயர் பெற்று விளங்க வேண்டும் என்று இவர் ஆற்றுப் படுத்தும் பாங்கு எவரையும் ஈர்க்கவல்லதாகும்

தோழியைப் பாடுங்கால் தூய தோழமையுணர்வைப் புலப்படுத்தும் பாவலர்,

                            இனிக்க இனிக்க பேசுவாள்
                             இன்னல் தீர்க்கும் நல்லவள்
                             கனியைப் போன்ற கவிதைகள்
                              கருத்தாய் எழுதிக் காட்டுவாள்
என்னும் பாடல் வரிகளில் உயிர் நட்பின் உயர்வைப் போற்றிப் புகழ்ந்து உள்ளம் பூரிக்கின்றார்.

                        நாயும் எனக்குத் தோழன் - குள்ள
                        நரியும் எனக்கு நண்பன்
                        ஈயும் எனக்கு நண்பன் - சின்ன
                         எறும்பும் எனக்குத் தோழன்

என்று பாடிய பாரதியார் அடியொற்றித் தம் பாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து வரும் பாவலர், பசு,  நாய்,  யானை,  எலி,  புலி, கிளி, பல்லி, மான், முள்ளம் பன்றி , சேவல், எறும்பு, ஆகிய உயிரினங்களைப் பற்றி நேசமுடன் பாடி நெஞ்சம் மகிழ்கின்றார்.

குழந்தை, மல்லிகை, பூக்கள் ஆகிய தலைப்புகளில் உள்ள பாடல்களில் இவரும் குழந்தையாகவே மாறிவிடுவதை காண முடிகிறது.

                   ”பெண்மை உயராத நாடதுவும்
                     பெருமை இழக்கும் நாடாகும்”

என்ற இவரின் பெண்களைப் பற்றிய பாடல்வரிகள் “பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டில் மண்ணடிமை தீர்தல் முயற் கொம்பே” என்ற பாவேந்தர் பாடல்வரிகளை நினைவுக்குக் கொணர்கின்றன.

கல்விக்கூடம் சென்று கருத்தாய்ப் படிக்க வேண்டும். கற்றபடியே நிற்க வேண்டும்: கடுமையாக உழைக்க வேண்டும் என்பன போன்ற இவரின் சிந்தனை வரிகள் குறட்பாக்களை வழி மொழிவதாய் அமைந்து சிறக்கின்றன.

இனிக்கும் அமுதம் பாவலர் சுவாதி அவர்களின் தரமான சுவையான தமிழ் விருந்தாகும். குமுக எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் முளைவிடும் வண்ணம் பாட்டு விதைகளைப் பக்குவமாக ஊன்றியுள்ளார்.

தமிழ் கூறுநல்லுலகம் முதிர்ந்த சிந்தனை மிகுந்த இத்தகு இளைய பாவலர்களை ஊக்குவிப்பதும் காப்பதும் நன்றிக்கடனாம்.

அன்பன்
கடவூர் மணிமாறன்
கிருட்டிணராயபுரம்
20.7.1996

2 comments:

  1. அன்புச்சகோதரி,
    கடவூர் மணிமாறன் அவர்கள் தங்கட்கு அவர் இம்முன்னுரை வழங்கிய ஆண்டில் மாயனூரில் எனக்கு முதுநிலை விரிவுரையாளராய் இருந்தவர்.
    அவரின் எழுத்தினூடே உங்கள் கவிதைகளைக் கண்ணுறும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி! வலைப்பூவில் எதும் இயங்குகிறாரா என்பதை அறிய விழைகிறேன்.
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி....அதன்பின் அவரைப் பற்றிய விவரம் அறியேன். நானும் அவருடன் பேச ஆசைப் படுகிறேன். எனக்கு யாரும் தெரிவித்தாலும் தங்களுக்குச் சொல்கிறேன்....

      Delete