Monday, May 26, 2014

தேர்வின் போது

தேர்வின் போது நடந்த அனுபவம் இது....

   தேர்வின் போது ஒரு பலகையில் 3 பேரை அமர வைத்திருந்தார்கள். முதல் நாள் தேர்வின் போது ஒரு கண்பார்வையற்ற பெண்மணி தேர்வு எழுத வந்திருந்தாள். எங்கள் பலகையில் 4 பேர் அமர்ந்திருப்பதை திடிரென்று பார்த்த தேர்வு அறை மேற்பார்வையாளர் (அவர் பார்க்கும் போது விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டு தேர்வு எண் எழுதி தேர்வையும் எழுத ஆரம்பித்திருந்தோம்.) ”என்ன இந்த பெஞ்சில் நாலு பேரு உக்காந்துருக்கீங்க” என்றார்.

   உடனே அந்த பார்வையற்ற பெண்மணி சார் எனக்கு பல்கலைக்கழகம் ஏற்படுத்திக் கொடுத்த துணையாள் இவர். அதற்கான ஆணை இதோ. நான் சொல்லச் சொல்ல இவங்க எழுதுவாங்க என்று அமைதியாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் கூறினார்.

   ஆனால் மேற்பார்வையாளரோ நீங்கள் எல்லாம் தனியாகத் தான் எழுத வேண்டும் . அங்கே அலுவலகத்தில் அலுவலரிடம் கேட்டு விட்டு அவர் சொல்லும் இடத்தில் அமர்ந்து எழுதுங்கள்  என்றார். அந்த நீங்களில் ஒருவித இளக்காரம் கேவலம், அதிருப்தி, எல்லாமும் இருந்தது. ஏதோ இவர்கள் எல்லாம் பிறக்க வேண்டாதவர்கள் என்பது போல் இருந்தது அவர்  குரலில் காணப்பட்ட கடுமை.

    அதனை அந்த அறையில் இருந்த அனைவரும் உணர்ந்தது போல் எனக்குத் தோண்றியது. எல்லோருமே தேர்வு எழுதுவதை விட்டு விட்டு பரிதாபமாக அந்தப் பெண்மணியைப் பார்த்தோம். அந்த்ப் பெண்ணும் எழுந்து நின்று அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்ற தோரணையில் அங்கேயா சார் என்றாள். அந்த்க் குரலில் ஒரு இயலாமையும் ஆற்றாமையும் தொனித்தது. ஏனெனில் அலுவலக அறைக்கு மைதானத்தின் வழியாக ச் சென்றடைய 10 நிமிடங்கள் ஆகிவிடும்.

    தேர்வை நாமாக எழுதும் போது நேர நிர்வாகம் மிகச் சரியாகச் செய்ய இயலும். நமது எழுத்தின் வேகநடைக்கேற்ப நாம் நம்மை த் தயார் செய்து விட முடியும். சொல்லி எழுத வைப்பதென்றால்...? அவரின் போக்கை இவர் எப்படி அறிய முடியும்.

    ஆனாலும் அந்த மேற்பார்வையாளர் ஆமாம்! அங்கேதான் அலுவலர் இருப்பார். அவரிடம் அனுமதி பெற்று அவர் எங்கே அமர வைக்கிறாராரோ அங்கேயே அமர்ந்து கொள்ளுங்கள். துணையாளோடு வருபவர்கள் முன்பேதெரிவிக்க வேண்டும் என்று தெரியாதா? நான் எப்படி உங்களை அனுமதிப்பது? உங்களுக்குத் துணையாள் போட்டிருப்பது பற்றி எனக்கு யாரும் கனவிலா வந்து சொல்வார்கள் ? உங்களுடைய விடைத்தாளை இங்கேயே கொடுத்துவிட்டுப் போங்கள் என்றார். உச்ச ஸ்தாயில்.

    விடைத்தாளில் பதிவு எண் எழுதப்பட்டு தேர்வின் தலைப்பு தேதி போன்ற விவரங்கள் எழுதப்பட்டு விடையும் எழுத்த தொடங்கியிருந்தனர். அதனை வாங்கிப் பார்த்த அவர் அதற்குள் ஏன் இப்படி எழுதினீர்கள்? உங்களுக்கு எப்படி தேர்வு முடிவு வரும்? சரி போங்க்ள். அங்கே போய் சொல்லிவிட்டு எழுதுங்கள் என்றார். அடித்து விரட்டாத குறையாக. வேண்டா வெறுப்பாகவும் .
தென்பட்டது.

   பார்வையற்றவர்களுக்கு உதவாவிட்டாலும் இது போன்ற் நான்காம் தர வார்த்தைகள் கலந்த செயல்களைத் தவிர்த்திருக்கலாம் அந்த மேற்பார்வையாளர். உடன் தேர்வு எழுத வந்த பெண்மணிக்கு ஒருவித எரிச்சல் ஏற்பட்டதை அவள் முகக்குறிப்பிலிருந்து முற்றிலுமாக உணர முடிந்தது. தேர்வு எழுத ஏற்றுக் கொண்டதே தவறோ என்ற பாவனையில் அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.

   எனக்கு வருத்தமாகவும் கவலையாகவும் வேதனையாகவும் இருந்தது. இருக்கிற மனித நேயங்களை எல்லாம் தொலைத்து விட்டு நாம் என்ன செய்யப் போகிறோம்?

மேற்பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் இரக்க குணம், நல்லமணம் பற்றி அறிய இயலாது தான். ஆனால் பல்கலைக்கழக தேர்வாணையங்கள் இது பற்றி ஒரு வழிமுறைகளை (instructions)  வழங்கி அனுப்பலாம் தானே? அவர்களுடைய நேரமும் மிச்சப்படும் மனத்தாங்கலும் தவிர்க்கப்படுமே?


4 comments:

  1. மேற்பார்வையாளர் கொஞ்சம் மனித நேயத்துடன் நடந்து கொண்டிருக்கலாம்! மாற்று திறனாளியான தேர்வரின் தன்னம்பிக்கையை குலைக்கும் விதமாக நடந்து கொண்டது வருத்தத்துக்கு உரியது!

    ReplyDelete
  2. முருகானந்தன்May 27, 2014 at 7:04 AM

    எதையும் அன்பாகவும் அனுசரணையாகவும் அணுகுவதான் உன் போக்கு வாழட்டும். உன் மனிதநேயத்திற்கு என் தலை தாழ்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நாகப்பன்June 5, 2014 at 4:21 AM

    பாவம் அந்தப் பெண். அதன் பின் அவர் எப்படித் தேர்வு எழுதினார் என்று விசாரித்தீர்களா? நான் இது பற்றி இப்போது தான் விழிப்புணர்வு பெற்றேன். எங்கள் பல்கலைத் தேர்வுகளீல் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள சொல்லியுள்ளேன். உங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete