Monday, March 10, 2014

எழுந்து வா சகோதரி.......(கவிதை)




விதியென்று
வீட்டுக்குள் உறங்கும் பெண்ணே
வெளியே வா
உனக்காகத்தான்
உலகம் காத்திருக்கிறது!

சிறையை விட்டு வந்து
செயற்கைகோளுக்குச் சென்று வா
அணு உலைகளை
ஆராய்ச்சி செய்து கொடு
அடிமைத்தனத்தை விடுத்து
அகிலத்தை
ஆராய்ச்சி செய்ய வா
அரிசிசோற்றை ஆக்கமட்டுமல்ல
விண்கலம் வரை உனது
விரல்கள் போகட்டும்

எழுந்து வா பெண்ணே
நீ
அடங்கிப் போனது போதும்
முரட்டுப் பிடிகளில்
முடங்கிப் போனதும் போதும்
நாளைய உலகை
நீ தான்
உருவாக்க வேண்டும்

குழந்த சுமக்க மட்டுமல்ல
உனது கருவறை
குவலயம் படைக்கும்
திருமறை நீதான்
நீ......நீதான்
இந்தியக் கலங்கரை விளக்கு
நீ.....நீயே தான்
பாரத்தின் பாதை...

வா
பதுங்கிக் கிடந்ததும்
ஒதுங்கிப் போவதும் தான்
ஒழுக்கம் என்ற
அழுக்கு சிந்தனையை விட்டு விடு

சடங்குகளுடன் சரிந்து போன நீ
சட்டம் எழுத வா
இருண்டு போன நெஞ்சங்களில்
உன்
எழுத்துக்கள் ஒளிரட்டும்

இப்போது பார்
உன்னை
ஒதுக்க முயன்றவர்கள்
உன்
பின்னே வருகிறார்கள்

உன்
கண்களின் ஒளியில் தான்
கதிர்கள்
கனல் கக்க வேண்டும்
உன்
கால்களின் பாதையில் தான்
கானக முட்களுக்குக்
கண் தெரிய வேண்டும்
உன்
கைகளின் எழுத்துக்களில் தான்
உலகமே உன்னதப் பட வேண்டும்

வா பெண்ணே வா
உலகம்
உனக்காகத்தான் காத்திருக்கிறது
************************************


4 comments:

  1. அருமை...

    தன்னம்பிக்கை தரும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்லதோர் கவிதை...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தன்னம்பிக்கை வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நாகப்பன்June 5, 2014 at 4:45 AM

    ஆணாதிக்கம் இன்னும் இருக்கிறது என்று என் போன்றவர்கள் வருந்தத்தான் செய்கிறோம்.

    ReplyDelete