Thursday, February 13, 2014

பதவிப் பிரமாணம் (கவிதை)

இன்று
பதவிப்பிரமாணம்!
பாரதப் பிரதமர் சொல்கிறார்.....!
இன்று முதல் இந்தியா
இன்னலிருந்து
இன்பத்திற்கு வந்தது! - என்று
உளறுமொழி கூறுகிறார்.
இல்லை....இல்லை
உறுதிமொழி கூறுகிறார்!

ஆனால்....
இருக்கிற உரிமைகளும்
எரிக்கப்பட்டு
பாரத பரதன் பரதேசியாகிறான்!

இன்று ஹோலிப் பண்டிகை!
கர்னாடகாவில்
தமிழர்களைத் தகர்தெறிந்து
இன்று போலிப் பண்டிகை!

ஆமாம்!
எங்கே நம் அரசியல் போலிகள்?

ஓ!
அம்பது வகைக் கார்களின்
அணிவகுப்பில்
பத்துவகை படைகளின் மத்தியில்
பாதுகாப்பாய் பேசிக் கொண்டிருக்கிறார்களோ?

பஞ்சம் போக்க பஞ்சணை
பட்டுத்தி பார்வைக்கு வருகிறது!

கோப்புகளில் மட்டும் தான்
கொள்கைகளின் அரங்கேற்றம்!
கோட்டைகளின் வாசலிலோ
குடிசைகளின் போராட்டம்!

குடிசைகளின் கோஷம்
குப்பைத்தொட்டியோடு!
மாளிகைகளின் கோஷம் தானே
மன்னர்களை எட்டுகிறது
!
மனுக்கள் மட்டும்
அனுப்பிக் கொண்டே இருக்கிறோம்
அது
மாளிகையின் மைந்தர்களுக்குப் பயன்படட்டும்!

தமிழ்நாட்டில் மட்டும்
தடைவிதிக்கப்படட்டும்
குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம்
ஏனெனில் இலங்கையில்
இரத்தம் சிந்தவும்
கர்நாடகாவில்
கண்ணீர் வடிக்கவும்
வெளி மாநிலங்களில்
வெட்டு, குத்து களில் பலியாவதற்கும்
தமிழனே தலைசிறந்தவன் என
தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளான்
எனவே தமிழ் நாட்டில் மட்டும்
தடை விதிக்கப்படும்
குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம்!

கொதிப்புகளெல்லாம்
கோட்டு சூட்டு போட்ட
கோ வர்க்கங்களுக்கேது?
கொள்கயாளர்களூக்குத்தானே!!!!!!!!!!

கோஷங்கள் இட்டே
கோவணங்களைக் கூட
இழந்துவிட்டோம்
ஆனாலும் கூட
அரை நிர்வாணத்தோடு
காந்தியாய் கட்சி வளர்க்கிறோம்!
ஆனால்...
கட்சியோ கர்ணர்களை விட்டு
அந்தரங்கமாக
அர்ச்சுணர்களோடு
கூட்டு வைத்துவிடுகிறது
மக்கள் உயிருக்கு
வேட்டு வைத்துவிடுகிறது!!!

புனித இடத்திலும் கூட
புல்லட் புரூப் போடவேண்டியுள்ளது
ஆனாலும் ....
சமரசம் பற்றி
சரித்திரர்கள்
பேச்சுவார்த்தை
நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

தெய்வங்களை
தெருவுக்குத்தெரு
உட்கார வைத்து விட்டு
தேசதுரோகம் தான் நடக்கிறது!

வாக்குறுதிகளின் கனவுகளிலே தான்
எங்கள்
வாழ்க்கையில் வளம் நிறைகிறது!

அங்கே ரதயாத்திரை
இங்கே ரத்த யாத்திரை
இனி நம் சந்ததியர் படிப்பார்கள்
சத்திய சோதனை பற்றி அல்ல!
இனவெறி இரத்த வேதனை பற்றி!

நாளை
செத்த அரசியலில்
சிகரத்தைத் தேடிய
செல்லாக்காசு போய்- ஒரு
செங்குட்டுவன் பதவிக்கு வருவான்!

அன்றும்
பதவிப் பிரமாணம் நடக்கும்
புதியா பிரதமர் சொல்வார்
இன்று முதல் இந்தியா
இன்னலிலிருந்து
இன்பத்திற்கு வந்ததென்று!
ஆனால்
இருக்கும் உரிமைகளும்
இறந்து போய்விடும்!

அடுத்த மூன்று மாதத்தில்
ஆட்சி கவிலும்....
அப்போதும்...
பதவிப்பிரமாணம் நடக்கும்!
புதிய பாரதப் பிரதமர்
உளறுமொழி கூறுவார்!
இல்லை....இல்லை...
உறுதிமொழி கூறுவார்!
பல்லவி தொடரும்!
*************************************

4 comments:

  1. வணக்கம்
    அரசியல் என்பது ஒரு நிகழ்வு போன்றது.... எதுவும் நடக்கலாம் .... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அனல் தெறிக்கும் "புல்லட்" வரிகள்...

    ReplyDelete
  3. நெருப்பென தகிக்கும் கவிதை! ஆனால் அனைத்தும் உண்மை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சூப்பர் சுவாதி

    ReplyDelete