Thursday, January 30, 2014

ஓவியர் பெயிண்டர் ஆனார்.(அனுபவங்கள்)

பள்ளிக்கு வர்ணம் பூச வேண்டும் என்று தலைவரிடம் சொல்லியிருந்தேன். தலைவர் சொன்னதாகச் சொல்லி ஒருவர் வந்திருந்தார். அவரின் தோற்றமே அவரின் ஏழ்மையை மிக அப்பட்டமாக நமக்குச் சொல்லியது.

அவர் அணிந்திருந்த கைலி அனேகமாக 2010ல் வாங்கப் பட்டிருக்க வேண்டும். வெள்ளையாக வாங்கப்பட்ட சட்டைதான் பழுப்பு நிறமாக மாறி அது ஒரு புது நிறமாக காட்சி அளித்தது.பெயிண்டர் என்பதற்கான அடையாளமாக ஆடையின் ஆங்காங்கே சில வண்ணத்திட்டுக்கள்..அந்த ஆடை துவைக்கப்பட்டு குறைந்தது ஒரு மாதமேனும் இருக்கும் என்றே தோன்றியது.


தியான வகுப்பு நடந்து கொண்டிருந்ததால் சற்று காத்திருங்கள் என்றேன். காத்திருந்த அவர் அங்கு கிடந்த குப்பை காகிதத்தில் ஏதோ வரைந்து கொண்டிருந்தார். நான் வந்தவுடன் எழுந்து வணக்கம் சொன்னார். பள்ளியைச் சுற்றிக் காண்பித்து விட்டு எத்தனை நாளில் முடிப்பீர்கள் எவ்வளவு கூலி என்பது போன்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தேன்

. எனது மேசையில் S.சுவாதி.M.Com.,M.A.,M.Phil.,B.Lit.,D.T.Ed.,தலைமைஆசிரியர் என்று ஒரு சிறு பலகை இருக்கும். அதைப் பார்த்து விட்டு அவராக நான் பி.காம் படித்தேன் மேடம் என்றார். அவர் வார்த்தையில் இருந்த பெருமையையும் மகிழ்வையும் கண்டு எனக்கு வியப்பாக இருந்தது. அடடா! அப்படியா! மேற்படிப்பு படித்து வேறு வேலைக்கு முயற்சி செய்திருக்கலாமே என்றேன் ஏன்.இந்த வேலையில் இருக்கிறீர்கள் என்றேன்.

அவரது பார்வை அந்த அறை முழுவதும் சுற்றிக் கொண்டே இருந்தது. பெரும்பாலும் வேலைக்காரர்கள் ஏன் இந்த வேலையில் இருக்கிறீர்கள் என்று கேட்டால் எல்லாம் என் விதி என்று ஒரு வித கதை சொல்வார்கள். அதில் அவர்கள் அகிலஉலகப் புத்திசாலி என்றும் விதி தான் தன்னை இப்படி ஆக்கி விட்டது என்றும் கூறுவார்கள். என் கேள்வியால் அவர் எந்தவித உணர்ச்சிக்கும் ஆளாகாமல் தொடர்ந்தார்.

நான் ஒரு ஆர்ட்டிஸ்ட் மேடம். உங்கள் பள்ளியில் வர்ணம் பூசியவுடன் நான் திருக்குறள் எழுதித்தருகிறேன் என்றார். எனக்கு மேலும் அதிர்ச்சி. ஒரு ஆர்டிஸ்டாக இருந்து கொண்டா வெள்ளை அடிக்கிற வேலை பார்க்கிறீர்கள்  என்றேன் வியப்பு மிகுதியில். அது பிடித்தம் இது தொழில் என்றார். இரண்டும் பிரஷ் தானே என்றவர் தொடர்ந்தார். ஏதோ எனக்குப் பிடித்த விஷ்யத்தில் அது சார்ந்த தொழிலில் இருப்பது தான் மகிழ்ச்சி. நான் வறுமையில் தான் இருக்கிறேன். ஆனால் நன்றாக இருக்கிறேன் என்றார்.

அந்த பதில் எனக்கு ஏதோ சொல்லியது. இங்கு எத்தனை பேர் டாக்டராக நினைத்து..ஓவியனாக நினைத்து...பாடகராக நினைத்து... அப்படியே ஆகி இருக்கிறார்கள். ஒரு வேளை பிடித்த தொழில் செய்தால் வறுமையும் கொண்டாட்டமாக இருக்குமா? எனக்குள் பல்வேறு கேள்விகள்.

இப்போது என் மேசையிலேயே அவர் விட்டுச் சென்ற குப்பைக் காகிதத்தில் அவர்  வரைந்திருந்த ஓவியத்தைப் பார்தேன். அது நீல வானத்தில் சிறக்கடித்துப் பறக்கும் பறவைகள்....

7 comments:

  1. அவரது திருப்தி தான் அனைவரும் வாழ்வில் உணர வேண்டும்... திருப்தியான செல்வந்தருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பலபேரின் வாழ்க்கை இப்படியாகத்தான் போய் கொண்டிருக்கிறது.
    எல்லாம் விதியாகத்தான் இருக்குமோ???? (சும்மா)

    ReplyDelete
  3. நந்தகுமார்January 31, 2014 at 6:25 AM

    நீல வானத்தில் பறக்கும் பறவைகள் என்று அழகாய் எழுதி இருக்கிறாய் சுவாதி... உன் எழுத்து நடை மிகவும் நன்றாக இருக்கிறது, நையாண்டி, நகைச்சுவை எல்லாம் எளிதாய் , இயல்பாய் கையாளுகிறாய். நீ ஏன் ஒரு நாவல் எழுதக் கூடாது? உன் எழுத்து நடை பற்றி உன் அய்யாவிடம் கருத்து கேட்டு நாவல் எழுத முயற்சி செய்... என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. வாழ்க்கை சிலருக்கு சில நேரம் கண்ணாமூச்சி ...
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பலரின் வாழ்க்கை இப்படித்தான் அமைந்து போகிறது! சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. திறமைகள் பார்த்தவுடன் தெரிவதில்லை என்பதற்கு இதுஒரு நல்ல உதாரணம் அருமை.

    ReplyDelete