Tuesday, November 17, 2015

பாடாதே

கனவுக் காட்சிகள்....பாடாதே.....கவிஞர் சுவாதி...கல்கியின் தீபம் இதழில் தொடராக வந்து கொண்டிருப்பது....10
*********************************************************************************

அன்பிருந்தால் பாடாதே “ இந்த வார்த்தை காளிதாசனை நிலை குலையச் செய்தது. சொன்னது யார்? அவன் ஆராதிக்கும், அவனை ஆட்டுவிக்கும் காளிதான். காளிதாசனைப் பொருத்த வரை காளி தேவி கடவுள் இல்லை: ஒரு தோழி,தாய், தங்கை, மகள் என்று எல்லா விதமாகவும் இருந்தவள் அவள்தான். அவளா சொல்கிறாள் “பாடாதே” என்று.

மெலிந்த தேகமாகவும் தீட்சண்யமான கண்களும் கொண்ட காளிதாசன் எப்போதும் சூலம் வரைந்த பின்  வெளியில் செல்லும் பழக்கம் கொண்டவன். சூலமாய் இருந்து தனக்கு வரும் தீங்குகளைக் களைந்து, நன்மைகளைக் கொண்டு வருவாள் காளி என்றே நம்பினான்.

ருதுசம்ஹாரம், மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம் என்று உலகளவில் ஒப்பற்ற இலக்கியம் படைத்தவன் காளிதாசன். இந்தப் பெயர் வரக் காரணமாய் இருந்தவள் காளி. காரியமாய் இயங்கியவளும் அவள் தான்.

காளிதேவிக்கும் காளிதாசனுக்குமான பிணைப்பை சொல்லி முடியாது. அந்தப் பிரியங்களின் வடிவைப் படைக்க, பகிர, வடிவமைக்க ஏதும் இல்லை. அதனால் தான் அவனுடைய எழுத்துக்களில் இறைமையின் எல்லையும் இருந்தது. இளமையின் துள்ளலும் இருந்தது. ஏனெனில், எல்லாவற்றுக்கும் காளிதேவியே மின்மொழிந்தாள்.

ஆடு மேய்க்கும் காலங்களில் மட்டுமல்ல: எப்போதும் இயற்கையுடன் இணைந்தவன், இயல்பாகவே மக்களோடு இயைந்து போகிறவன். காலம் அவனை உச்சத்தில் வைத்த போதும் இயற்கையை நேசிப்பது , மற்றவர்களை நேசிப்பது என எதுவும் மாறவில்லை: மாற்றிக் கொள்ளவே இல்லை. காளிதாசனிடத்தில் எது செய்த போதும் அதில் புதுமை இருந்தது. அவனது உழைப்பில் வேகமும், செயல்களில் விவேகமும் இருந்தது. குறைபாடுகள் உடையோர் மட்டும் தான் மனிதர்கள் என்ற வார்த்தைகளையும் உடைக்கத் தெரிந்தவன் அவன். உருவ அழகு சுமாராக இருந்தாலும் உள்ளத்தால் தேவாழகு பெற்றிருந்தவன். உருவ அழகைவிட உள்ள அழகை இந்த உலகம் கொண்டாடத் தவறுவதில்லை. 

உலகஎமே கொண்டாடும் போது போஜமன்னன் மட்டும் கொண்டாட மாட்டானா? எழுத்தால், இலக்கியத்தால் இணைந்த பிணைப்பு தான் இருவருக்கும். பொதுவாக, திருமணத்துக்குத்தான் பத்து பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஆனால், நாம் வாழ்க்கையில் பார்ப்போர், பழகுவோருக்கெல்லாம் பார்த்தால் ஆகுமா? அப்படியான பொருத்தங்களை உடையோர் தான் இருவரும். மற்ற கவிஞர்களைத் தாண்டி, படைத்தலைவவை, அமைச்சர்களைத்தாண்டி, மற்ற பணியாளர்கள், ஏன் பட்டத்தரசியையும் தாண்டிய ஒரு பிரியமும், பாசமும் கொண்டிருந்தான் மன்னன்.

அப்படி எத்தனை பேருடன் நமக்கான இணக்கம் இருக்கும்? எல்லாப் பாத்திரங்களிலும் பொருந்திப் போகும் தண்ணீராய் இருந்தான் காளிதாசன். அதே சமயம் தன் கொள்கைகளில் ஒன்றைக்கூட அவன் விட்டுத் தருவதில்லை. பிறரை மாற்றுவதில் காளிதாசனுக்கு நிகர் அவனேதான். ஒரே ஒருவன் திடமானவனாகவும், நெகிழ்தன்மை உடையவனாகவும் இருக்க முடியுமா? மன்னனுக்கு வியப்பு. இப்படி ஒரு மனிதனை , மகா கவிஞனை தன் வாழ்நாளில் சந்தித்திருக்கவில்லை. அவன் என் அரசவைக் கவிஞன் என்ற இறுமாப்பு, பெருமிதம் எல்லாமும் இருந்தது.

அவன் நட்பிலும், பேச்சிலும், செயலிலும், அப்படிப்பட்டவனைத்தான், “பாடாதே” என்கிறாள் காளி. 

காலை முதல் இரவு வரை எல்லா நேரங்களிலும் இலக்கியம் அன்றி வேறொன்றும் அறியாதவன, “பாடு, பாடு” என்று ஆற்றுப்படுத்தி மாளவிகாக்கினி மித்திரம், விக்கிரம ஊர்வசியம், அபிஞான சாகுந்தலம் என்ற புகழ் பெற்ற இலக்கியம் தந்த ஒருவனைத்தான் “ அன்பிருந்தால் பாடாதே” என்கிறாள் காளி

காளிதாசனுக்குத் தோன்றிய கனவு இது தான். அருள் பொங்கும் காளீதேவி, அன்பிருந்தால் பாடாதே” என்று சொல்வது போல், கீழே பச்சை தென்னை ஓலை காண்பிக்கப்படுகிறது. இந்தக் கனவால் தான் இந்தக் குழப்பம்.

பாடு என்றோ, செய் என்றோ ஊக்கம் கொடுத்துத்தானே காளிக்கும் பழக்கம், மாறாக, செயலற்று இரு என்று சொல்வாளோ என்று சிந்தித்துக் கொண்டே இருந்தவன் துள்ளிக் குதித்தான்.

கனவில் வந்தது காளிதேவியின் கருணை முகம் தாங்கிய உருவம் தான். ஆனால், குரல் தனக்குப் பழக்கப்பட்ட ஒரு குரல். யார் குரல்? ஆம்: அது மன்னனின் குரல்.

பச்சைத் தென்னை ஓலை காட்டப்பட்டதே...அப்படியானால் அது இறப்பைக் குறிக்கிறதே...நான் பாடினால் என் இனிய நண்பன் மன்னனுக்கு ஆபத்தா? என் பாட்டால் உற்சாகம் அல்லவா பெறுவான்?

சிந்தனை வலுப்பெற்று, கேள்விகள் மூளையை துளைத்தெடுத்தன.  ஒருவேளை பகலில் யாருடனாவது பேசியது, எதிர்மறையாக எனக்குள் கொண்டு வந்து அப்படி பிரமையாக்கியதோ? எதார்த்தமாக ஒரு சாதாரணக் காரணமாக இருக்கலாம். சரிதான். அதை மறந்து விட வேண்டியது தான் என்று நினைத்த வேளையில் மன்னன் அழைத்தான்.

“ நண்பா, உன் பாடல் எல்லாவற்றையும் கேட்கும் பாக்கியமும் அதிஷ்டமும் பெற்றேன். ஆனால், இரங்கற்பா கேட்கவில்லை.. எனவே, இரங்கற்பா பாடு” என்றான்.

நிமிடத்தில் புரிந்து விட்டது காளீதாசனுக்கு. கனவின் எச்சரிக்கை இதுதானா?

”என் தாயே! தக்க சமயத்தில் விழிப்புணர்வு தந்தாய். உன்னைத் தவிர வேறு யார் இப்படி உணர்த்த முடியும்” என உருகினான். போஜனிடம்,  ”பாட இயலாது” என மறுத்தான்.

கேலியாய் பேசியும், கிண்டலாய் உணர்த்தியும் மசியாத காளிதாசனை வழிக்குக் கொண்டு வர வேண்டி, “அப்படியானால் என் கண்ணில் விழிக்காதே போ...நான் இருக்கும் இந்த அரண்மனையில் கூட வாழாதே எங்கேனும் போ” என்று கத்தித் தீர்த்தான் போஜராஜன். நட்பை மீறி தன் ஆணைக்கேனும் பணிவான் என்ற ஒரு நப்பாசையிலும் எப்படியும் பாடல்களைக் கேட்டுவிட வேண்டும் என்ற துடிப்பிலும் அவன் வார்த்தைகள் தீயைக் கக்கின.

காளிதாசனுக்கு அவன் வார்த்தைகள் வலித்தன என்றாலும், மன்னன் இந்த மண்ணில் இருக்க வேண்டும், மண்ணுக்குள் இருக்க வேண்டியவன் அல்ல. இன்னும் பல கலைஞர்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். “ இன்னும் பல களைகளையும் எடுக்க வேண்டும். “ என நினைத்தான். நெஞ்சமெல்லாம் கனத்துடன் “ சரி நான் போகிறேன்” என்றான்.

காளிதாசனைப் பிரிந்த போஜனால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை, என்றுமே அன்பு காந்தமானது, அது அதன் ஒத்தவற்றை ஈர்த்தே தீரும், ஈர்ப்பு விசையால் இயங்குவது தான் அதன் அற்புதம்: அதன் நறுமணமும் உலகை ஈர்க்கும்.

இப்போது போஜனுக்கும் கவலை ஏற்பட்டது. “ நான் கேட்டது தவறோ? என் மேல் பிரியம் இருந்ததால் தானே மறுத்தான்? அந்த அன்பின் அடர்த்தியை நான் தான் உணரத் தவறினேனோ? “ என்றெல்லாம் குமைந்தான். யோசித்த வேளையில் மன்னனுக்கு ஒரு வழி புலப்பட்டது. மாறுவேடத்தில் காளிதாசனைப் பார்ப்பது. அது ஒன்றும் எளிதல்ல. காளிதாசன் பளிச்சென்று கண்டுபிடித்து விடக்கூடும். அதே சமயம் கடினமானதும் இல்லை. காரணம், தன்னைப் போல அவனும் வருத்தத்தில் இருப்பான் என்றும் தோன்றியது. நட்பை நோக்கிக் கிளம்பினான். ஆறு நாட்கள் தேடலில் கண்டடைந்தான். இப்போதும் மனதுக்குள் இரங்கற்பா ஆசை துளிர்விட்டது. “ சரிதான் முயற்சி செய்வோம். கிடைத்தால் பாடல்:இல்லாவிட்டால் நட்பு” என்று நினைத்தவனாய், அவன் பக்கம் போய், வேறு ஒரு வணிகனிடம் பேசுவது போல்  காளிதாசனுக்குக் கேட்குமாறு, “ மன்னன் மடிந்தான் தெரியுமா? “ என்றூ.

சொன்னது யார்? அது உண்மையா? பொய்யா? என்று எதுவும் கேட்கத் தோன்றவில்லை காளிதாசனுக்கு. இதென்ன கொடுமை? எப்படிப்பட்ட மன்னன்? எப்பேர்ப்பட்ட ரசிகன்? அவனா இறந்து போனான்? துக்கம் தொண்டையை அடைத்தது. நெஞ்சு கலங்கியது. கண்கள், அருவியின் தொடக்கத்தை அறிந்து கொண்டன. “ உன்னை இழக்கக்கூடாது என்று தானே இரங்கற்பா பாடாது வந்தேன்? இறக்கும் தருவாயில் உன் அருகில் இல்லாது போனேனே? என்னை நினைத்தாயோ? கர்வம் பிடித்த காளிதாசன் என்று நினைத்து என்னை வெறுத்தவாறே உயிர் விட்டாயோ? உயிரோடு இறந்த பாடல் கேட்டாய். ஆனால், இறந்து இந்த உயிர்ப் பாடலக் கேட்க வருவாயோ?

என் காளி எல்லாமும் தந்தாளே? எனக்கு என் நண்பனை மீட்டுக் கொடுப்பாளா? என்று கதறித் துடித்தான்.

அந்தக் கலக்கத்தின் எல்லையில் தன்னை மீறிப் பிறந்தது இரங்கற்பா. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஆனந்தமாகக் காளிதாசனை அணைத்துக் கொண்டான்.

அவனைக் கண்ட காளிதாசன் திடுக்கிட்டான். ஆம்: அவன் போஜராஜன். “நண்பா, தவறு செய்து விட்டாயே...இன்னும் 60 நாழிகைகள் தான் உன் ஆயுள். அதற்காகத் தானே, இரங்கற்பா பாட மறுத்தேன்” என்று துடித்தான்.

கதறலுடன், மன்னனை அணைத்தான். அந்தக் கண்ணீரில் வெளிப்பட்ட நட்பின் வாசலில் இரண்டு இதயங்கள் உதயமாயின: உறவாயின: ஒன்றின: இந்த நட்பில் ஏழ்மை, உயர்மை என்ற ஏற்ற தாழ்வுகள் இல்லை. அன்பும் அதனைச் சார்ந்த எண்ணங்களுமே வலிமை கொண்டிருந்தன.

மன்னனும் கலங்கினான். ஆனால், அஞ்சவில்லை. தெளிவாகச் சொன்னான். “ நண்பா, இன்றில்லா விட்டால், நாளை இறக்க வேண்டிய வாழ்க்கை தானே இது. அதைவிடு. நமக்கு இன்னும் 60 நாழிகை இருக்கிரது. அதற்குள் நாமிருவரும் ராமாயணத்தைப் பாடலாமா?” 

மரணகாலம் தெரிந்து விட்ட நிலையிலும் , மகாரசிகனாக போஜன் எழுப்பிய ஆசை காளிதாசனை உருக்கியது. சரி என்று போஉக் கொண்டான். இருவருமாக பாட ஆரம்பித்தார்கள். “ போஜ சம்பு” உருப்பெற்றது. காளிதாசனின் கனவும் பலித்துப் போனது.

காண்போம்

********************************************************************

Friday, November 13, 2015

கடவுளைக் கண்டேன்

1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும்
( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட வேண்டும்...அவுங்களும் பாவம் ல.)

2. அனைத்து தொழில் நுட்பக் கல்லூரிகளும் இந்தியாவுக்குள் வர  வேண்டும். இங்கே வந்து படிக்க வேண்டும். வேலை பார்க்க வேண்டும் என்று எல்லோரும் (அயல் நாட்டில்) கனவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

3. டாஸ்மாக்கை மூட வேண்டாம். அது திறந்தே கிடக்கட்டும். ( ஆனால் ஒருத்தர் கூட அங்கே போகக் கூடாது)( எப்பூடி? என்னைக் கைது பண்ண முடியாதுல்ல)

4. இந்தியாவுக்குள் மட்டுமே சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் வேண்டும். ( வருடத்திற்கு ஒரு முறை 10 நாள் விடுப்பில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற சலுகை என்னால் அளிக்கப்பட்டு விட்டது)

5. அமைச்சர்கள், மற்ற உயர் அதிகாரிகள் அனைவரும் சாதாரண டவுன் பஸ்ஸைத் தான் உபயோகிக்க வேண்டும். ( தனியாரிடம் யாரிடமும் கார் வசதி இருக்கக் கூடாது...நான் உள்பட)

6. பெண்களைக் கொச்சையாகத் திட்டும் திரைப்படங்கள், பெண்களை கேவ்லமாக , எழுதும் எழுது கோல்கள் உடைந்து போக வேண்டும்..திரைப்படங்கள் தீக்கிரையாக வேண்டும்.

7. உலகத்தில் எந்த மூளையில் புத்தகங்கள் வெளியிட்டாலும் அது அடுத்த நொடியே எனக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.

8. எனது 50 வயதிற்குள் நான் எனது 100வது புத்தகத்தை வெளியிட வேண்டும்.

9. உலகத்தின் உச்ச விருதுகள், வழங்குவதற்கு என் அனுமதி பெற்றே வழங்க வேண்டும்.நோபல் உள்பட.

10. எனக்குள் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே வளர வேண்டும்.

*********************************************************************************

நான் பரிந்துரைக்கும் 10 நபர்கள்
******************************

1.    http://www.jokkaali.in/

2. http://bharathidasanfrance.blogspot.in/2015/11/blog-post_10.html

3.http://oomaikkanavugal.blogspot.com/

4. http://manamkondapuram.blogspot.com/

5.http://timeforsomelove.blogspot.in/

6. http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/

7.http://inithuinithu.blogspot.in/

8.http://saamaaniyan.blogspot.in/

9.http://unmaiyanavan.blogspot.in/

10.http://gobisaraboji.blogspot.in/2015/11/blog-post.html

இதுல இத்தனை பேருகளை  ஏற்கனவே வேறு யாராவது கோர்த்திருந்தால்கம்பெனி  (நான் )பொறுப்பல்ல.
********************************************************************************8

Thursday, November 12, 2015

நட்பின் சிகரம் ( கனவுக்காட்சிகள்)

நட்பின் சிகரம்.....( கனவுக்காட்சிகள்...கவிஞர் சுவாதி...11)

( விரைவில் விடுபட்ட பதிவுகள் வரும்)
*********************************************************************************


ஆனந்தம், குழப்பம் இரண்டின் சங்கமகாகவே இருந்தான் கர்ணன். கனவு அவனுக்குள் இரண்டு விதமான அலைகளையும் பெருக வைத்திருந்தது.

ஒன்று, அவன் அரச குலத்தைச் சேர்ந்தவன் என்பது. அதனால் உண்டானது ஆனந்தம். இதை ஏற்கனவே அவன் அறிந்திருந்தான்.சொன்னவர் பரசுராமர்.

வண்டு தொடையைத் துளைத்து அப்புறம் போகும் வரை பொறுத்திருக்க ஒரு ஷத்திரியனால் தான் முடியும் . நீ என்னிடம் பொய் சொல்லி, கற்றுக் கொண்ட வித்தை கடைசித் தருணத்தில் உனக்குப் பயன் படாமல் மறந்து போகும் “.

இப்படி ஒரு சாபத்தை அவர் சொன்ன போது, முதலில் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த சாபத்துக்குள், தான் ஒரு ஷத்திரியன் என்கிற செய்தியும் ஒளிந்திருக்கிறது என்பதை அறிந்த நிலையில், வருத்தத்தை விட சந்தோஷம் பீறிட்டது. அந்த சந்தோஷம் சரிதான் என்பதை , இந்தக் கனவு ஊர்ஜிதம் செய்து விட்டது.

ஆனால், கனவின் அடுத்த பகுதிதான் குழப்பமாயிருந்தது. அப்படி என்ன தான் கனவு?

வானத்தில் இருந்து வந்த ஒளி, அவன் நாட்டைக் கருப்பாக்கி விட்டது. முகம் தெரியாத ஒரு பெண் தென்படுகிறாள். அவளையே அம்மா என்றும், மகாராணி என்றும் குறிப்பிடுகிறார்கள். தெய்வம் வந்து யாசகம் கேட்கிறது. அம்மா எனப்பட்டவளே வரம் கேட்கிறாள். துரியோதனனின் தோட்டம், பூக்களெல்லாம் கருகி பொலிவிழந்து கிடக்கின்றன.

இவ்வளவு தான் கனவு. தான் ஷத்திரியன் என்று அறிந்தால் ஆனந்தப்பட்டவன், கனவின் பிற பகுதிகள் இன்னெதென்று புரியாமல் குழம்பிப் போனான். அதே சமயம், அவை நல்ல செய்தியை உணர்த்தவில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது.

இருந்தால் என்ன? இனி என்ன செய்வது? எல்லாவற்றையும் தன்னோடு பகிர்ந்து கொள்ளும் துரியோதனனிடம் இதைச் சொல்வதா? வேண்டாமா? ஆனால், கனவு அவனைப் பற்றியது, அவனிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பது? சொல்லவும் முடியாது. நல்ல செய்திகளைப் பகிரலா,. இது அப்படியா? சரி,  போகட்டும்.

தான் ஷத்ரியன் இல்லை என்பதால் ஏற்பட்ட அவமானங்கள் இப்போது தவிடு பொடியாகி விட்டன. நம் பிறப்புக்குக் காரணமான அந்த அன்னையை சந்திக்கவும் போகிறோம் என்கிற நினைப்பு மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து புத்துணர்ச்சியானது.

ஆனால், கனவின் பிற பகுதிகள், தொடையைக் குடைந்த வண்டு போல் மனத்தைக் குடைந்து கொண்டே இருந்தன. நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொன்றாய் புரிய ஆரம்பித்தன.

அவன் நாட்டை ஒளி பாய்ந்து கருப்பாக்கியதன் பொருள் என்ன? சூது அவனுடைய வெளிச்சத்தை ஆற்றலை கவர்ந்து செல்லப் போகிறது என்பதற்கான குறியீடு என்பது அவனுக்குப் புரிந்தது. “அம்மா” எனப்பட்ட “மகாராணி” இன்னார்தான் என்று புரிந்த போது, ஆனந்தமும் துக்கமும் ஒரு சேர சங்கமித்தன அவனுக்குள்.

எந்த அர்ஜுனன் மேல் வெறுப்படைந்திருந்தானோ, அவன் தன்னுடைய தம்பி என்பதால் ஆனந்தம். ஆனால், அவன் அல்லது தான் இருவரில் ஒருவர் தான் எஞ்சியிருக்க முடியும் என்பதை அறிந்து தான் சற்றே கலக்கம். வேறு வழியில்லை. துரியோததனுக்கு பீஷ்மரைவிட, துரோணரை விட நம்பிக்கைக்குரியன் கர்ணன் தான். “ தன்னுடைய சந்தோஷத்தைக் கண்டு ஆனந்தப்படுகின்ற அற்புதமான நண்பன் என்று கர்ணனை உளம் நிறைய கொண்டாடிக் கொண்டிருக்கிறான் துரியோதனன்.

அது மட்டும் தானா? தேரோட்டியின் மகன்” என்று எல்லோரும் ஏளனம் பேசிய தருணத்தில், அங்க நாட்டின் மன்னனாக அறிவித்து, அலங்காரம் செய்தவன் அவன் அல்லவா? “பொன்னும் கொடுப்பான்,: பொருளும் கொடுப்பான், என்றெல்லாம் புலவர்கள் பாடியதற்குக் காரணமான செல்வம் அவனால் அல்லவா கிடைத்தது. கொடுத்தவன் கர்ணன், ஆனால், அவனுக்குக் கொடுக்கப்பட்டது துரியோதனனால் அல்லவா?

கர்ணனின் ஈர நெஞ்சம் உணர்ச்சிகளால் குழைந்தது: இறுகியது: நெகிழ்ந்தது.... ஈரமான உள்ளங்களுக்கு எப்போதுமே போராட்டம் தான். எல்லாவற்றையும் வாங்கி, விதைத்து, விளைந்து, காயப்பட்டு, ரத்தம் சிந்தி...கர்ணனுக்கும் அதே நிலைதான். ஆனாலும், எந்த நிலையிலும் எதை முன்னிட்டும் துரியோதனனை விட்டுக் கொடுப்பதில்லை என்று உறுதி கொண்டது அவன் உயர் நெஞ்சம்.

ஆனால், அவனை துரியோதனனிடம் இருக்க விட்டு, அவனுடைய ஆற்றலை பலவீனப்படுத்தியது தெய்வசக்தி> தெய்வ சதி, வேறென்ன சொல்வது? விதி வகுத்த பாதையில்  ஓடியது அந்தப் பேராறு. அவ்வளவுதான்.

தன் மகன் அர்ஜுனனுக்காக இந்திரன் வந்து வரம் கேட்டான். எப்போது? மிகச் சரியாக கர்ணன் சூர்ய வழிபாடு செய்யும் போது, ஏன்? அப்போது யார் வந்து என்ன தானம் கேட்டாலும் அதைக் கொடுக்கும் ஒரு உயரிய கொள்கை வைத்திருந்தான் கர்ணன். அதனால் தான், இந்திரன் வந்து கேட்டதும் தனது கவச குண்டலங்களையும், இழக்க வேண்டியதாயிற்று.

 சூரியன் எச்சரித்து என்ன பலன்? தானே ஏற்படுத்திக் கொண்ட விரதம், கர்ணனையும் கட்டியது. மாற்றிச் சொன்னால், அவன் விரதன் என்கிற கயிரால் அவனையே கட்டிப் போட்டார்கள்” பவீனமாக்கினார்கள்.

ஜயத்ரதன் என்னும் சிந்து அரசன், அபிமன்யூ சக்ர வியூகத்தில் நுழையும் போது துரோணரின் கட்டளைப் படி உதவி செய்தான். அதன் படி, அபிமன்யூ இறக்க, அந்தப் பழியும் கர்ணன் மீது விழுந்தது. கர்ணனுக்குப் பல மகன்கள் இருந்தனர். அவர்களின் ஒன்பது பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களில் விருஷ கேது மட்டுமே போருக்குப் பின் அர்ஜுனனின் அரவனைப்பில் இருந்தான்.

திரௌபதியுன் சுயம்வரத்தைத் தொடர்ந்த கை கலப்பில் சுதமா இறந்தான். ஷத்ருஞ்ஜயா மற்றும் த்விபடா ஆகியோர் குருஷேத்ர போரில் துரோணர் தலைமை தாங்கிய போது அர்ஜுனன் ககளில் மடிந்தனர். சத்யசேனா, சித்ர சேனா மற்றும் சுஷர்மா நகுலனின் கைகளால் இறந்தனர். கர்ணனின் மூத்த மகன் வீரசேனா போரின் கடைசி நாளில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். ஆக, கர்ணன் தான்மட்டும் நன்றி உடையவனாக இருக்க வில்லை: தன் மகன்களையும் அப்படியே துரியோதனனுக்கு வழங்கியிருந்தான்.

கர்ணன் பாண்டவர்கள் தனது சகோதரர்கள் என்ற உண்மை தெரியும். ஆனால், பாண்டவர்களுக்கு அது தெரியாது.

போரிடும் வேளையில், அர்ஜுனனின் தேரை தன்னுடைய கணை வீச்சால் கர்ணன் பின்னுக்கு நகர்த்திய போது, கிருஷ்ணனே “ மாவீரன்” என்று கர்ணனைப் பாராட்டினான். அர்ஜுனனுக்கு கோபம் வந்தது. “ நான் கர்ணனின் தேரை பல மைல் பின்னுக்குத் தளிளியும் என்னைப் பாராட்டாமல் அவனை எப்படிப் பாராட்டலாம்” என்றூ கிருஷ்ணன் சொன்னான். கடவுளின் துணையோடு உள்ள இந்தத் தேரை பின்னுக்குத் தள்ளுபவன் மகாவீரன்” என்று.

தன் மகன் இழிவடைவதைப் பார்க்கப் பொறுக்க முடியவில்லை. சூரியனால், ஒவ்வொரு முறையும் எச்சரிக்கிறான். “ தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” தான். ஆனால், தந்தை தராத நாட்டை நண்பன் தந்தான். தந்தை அமைத்துக் கொடுக்காத அந்தஸ்தை நண்பன் அமைத்துக் கொடுத்தான். எனவே, நட்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் கர்ணன்.

ஒரு மகாவீரனை யாரும் வீரனாய்ப் பார்க்கவில்லை. அவன் குலம் என்ன? என்ன பிறப்பு? என்பதிலேயே தான் அவர்களின் கண்ணோட்டம் இருந்தது. இந்த பழிச்சொல்தான் அவனை எல்லாவற்றையும் கற்க வைத்தது. என்னால் முடியும் என்று ஒவ்வொரு முறிஅயும் சொல்லிக் கொண்டான். போர்க் கலைகளும், ராஜதந்திரங்களும், வித்தைகள் அனைத்தும் தனக்குக் கைவரப் பெறும் என்று உறுதியாக நம்பினான்.

திரௌபதையின் சுயம்வரத்தில் திரௌபதையின் மீது முதலில் ஆசைப்பட்டவன் கர்ணன் தான். ஆனால், திரௌபதை கர்ணனை நிமிர்ந்து பார்க்கும் தருணத்தில், “தேரோட்டியின் மகனே” என்று கண்ணன் அவனை அழைத்ததால், பார்வையை அவன் மீது வீசவேயில்லை திரௌபதி. பார்த்திருந்தால் அவன் அழகு. வீரம் மிகுந்த தோற்றம், ஷத்திருயனுக்குரிய தீர்க்கமான கண்கள், திடமான வலிய தோள்களைக் கண்டிருப்பாள். ஆனால், பார்க்காததற்குக் காரணமான கண்ணனை விட, பார்க்காமலேயே போன திரௌபதையின் மேல் அதிகக் கோபமும் பகைமையும் கொண்டான் அவன்.

பின் நாளில் மறந்தான் தான் என்றாலும், அந்தத் தோல்வி , தன் பிறப்பைப் பற்றிய எள்ளி நகையாடல் என்று நினைத்ததாலேயே அவையில் அவளை துகில் உரியும் போது அவன் அதர்மமாக நடந்து கொள்ள நேர்ந்தது.

கர்ணனின் வாழ்வு முழுவதும் நிராகரிப்புகள், வேதனைகள், துயரங்கள் தான். ஒருவனுக்கு தன் முயற்சியால் வரும் துன்பங்களையும் விட தன்னை அவமானப் படுத்துதலால் வரும் துன்பமே கொடூரமானது. அதனைத்தான் தன் வாழ்நாளெல்லாம் சந்தித்தான் கர்ணன்.

தன் பேச்சு வன்மையாலும் போர்த்திறனாலும், நிஷாதர்கள், கலிங்கர்கள்...என்று தன் அருகில் இருக்கும் அனைத்து நாட்டவர்களையும் துரியோதனனுக்காக போர் புரியவருமாறு கேட்டுக் கொண்டான். கண்ணன் வரமாட்டான் என்பதும், கண்ணனின் படை உதவி கிடைக்கும் என்பதும், அவனுக்குத் தெரிந்தே இருந்தது. 10 நாட்கள் வரை குருஷேத்திரப் போரில் கலந்து கொள்ள இயலாததும் பெரிய வலிதான், ஆனாலும், அதனையும் மறைத்து 11ம் நாள் போரில் ஈடுபட்டான். பாண்டவப் படையை கலங்க வைத்தான்.சல்லியனுக்கும் தனக்கும் பிணக்கு இருப்பதாய் கர்ணன் உணரவே இல்லை. ஆனால், சல்லியன் கர்ணனை பகைவனாய் நினைத்தான். தான் சார்ந்த நாடு தோல்வியுறுவது பற்றி கவலை கொள்ளாமல், கர்ணன் கொலையாக வேண்டும் என்றே அவன் கருதினான்.

மீண்டும் கனவைப் பாருங்கள்.

துரியோதனனின் தோட்டப் பூக்கள் கருகி பொலிவிழந்து....துரியோதனன் போரில் உறவுகளை இழந்து, அரசிழந்து, குந்தி கேட்ட வரம், இந்திரன் யாசகம், கிருஷ்ணனின் வரம் நாகாஸ்திரம், கடோத்கஜன் வதம், ...போரில் நடந்த கிருஷ்ண சாமார்த்தியம். கர்ணனின் மகன்கள் இறந்தது. ..

அவன் கனவு பலித்து விட்டது. மீதம் இருப்பது ஒன்றுதான். அவன் ஷத்திரியன் என்பது உலகுக்குத் தெரிய வேண்டும். அது தெரிய வேண்டுமென்றால், அதற்கு தன் இறப்பு துணை செய்யும் என்று ஆழ்மனதில் எழுந்த காரணத்தால் தான், அவன் இறப்பும் ஏற்பட்டது. எளிதில் இறக்கும் உடம்போ மனசோ இல்லை அது. அவன் மனதால் இறப்புக்குத் தயாரானதால் இறப்பு அவனை எட்டியது,

சரி, தவறு என்பதெல்லாம், அவரவர்களின் சூழலைப் பொறுத்து மாறுபவை. ஆனால் அறம் என்பது சார்பில்லாதது. அது மாற்றம் இல்லாதது. சரியானதை அது அங்கீகரிக்கும். சரியற்றதை தூக்கி வீசி விடும். கர்ணனின் கனவு பலித்தது. காலம், துரியோதனுடனான நட்பை ஒதுக்கியது. கொடையில் கர்ணனை குன்றிலேற்றியது.

******************************************************************************

Wednesday, November 4, 2015

கனவுக்காட்சிகள்

சகுனி பற்றி எழுதப்பட்ட தொடர்...அடுத்த பதிவில்...ஏழுக்குப்பின் ஒன்பது என்று நினைக்க வேண்டாம். நன்றி

கலை நகர்...

கல்கியின் தீபம்,,,கனவுக்காட்சிகள்...09...கவிஞர் சுவாதி
***********************************************************

ஆழ்ந்த உறக்கத்தில் வந்த கனவு, நரசிம்மவர்மன் வியந்து போனான். “மாமல்லபுரத்தில் கடற்கரையில் எழுப்பப்பட்ட குடை வரைக்கான வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், தற்போது உருவாகியுள்ள வடிவம் இப்படியில்லையே...இந்த வடிவத்தைத்தான் சிற்பிகளிடம் சொன்னோம். அவர்களுக்குப் புரியவில்லை...இல்லையில்லை...அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் நாம் சொல்லவில்லை. அதனால் நேர்ந்த குரைபாடு இது. இப்போது என்ன செய்வது? இடித்து விட்டு மறுபடி வேறு அமைக்க வேண்டியதுதான்.

மன்னனின் உத்தரவைக் கேட்ட சிற்பிகள் திகைத்துப் போனார்கள். கஷ்டப்பட்டு மாதக்கணக்கில் செய்த பணியை இடித்துத் தூளாக்குவதா? இடிக்கவே மாதக்கணக்காகுமே...எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டு..எவ்வளவு பேரின் உழைப்பு இது? இதைத் தகர்ப்பதா? மன்னர் ஏனிப்படி உத்தரவிடுகிறார்? சித்தம் கலங்கி விட்டதா அவருக்கு?

சிற்பிகளின் எண்ணங்கள் இப்படி தாறுமாறாக ஓடின. பல்லவ மன்னரான நரசிம்மவர்மரை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா என்ன? தந்தைக்கு விசித்திரசித்தர் என்ற பெயர் பொருத்தம் என்பது போல், இவருக்கும் அது பொருந்துகிறது. எப்படி எதை எப்போது நினைப்பார்”: செய்வார்: என்று அனுமானிக்கவே முடியவில்லை.

அவர்களின் சிந்தனை இப்படியெல்லாம் ஓடுகிறது என்பது, மாமல்லரான் நரசிம்மவர்மருக்கும் புரிந்து தான் இருந்தது. என்ன செய்ய? அவருடைய கனவுகள் அவ்வளவு பளிச்சென்று தெளிவாக இருக்கின்றனவே. கட்டியதை இடித்துத் தள்ளக்கூட 60 நாட்கள் ஆனது. பலருக்கு கண்ணீர் அல்ல...செந்நீரே வந்தது.

மன்னனும் சாதாரணமானவன் இல்லை. வணிகம், மருத்துவம், வேளாண்மை என்று எந்தத்துறையின் நிபுணர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் தன் அருகில் வைத்திருந்தான். அவசியம் ஏற்பட்டால் அவர்களிடம் எந்த இரவிலும் தமது ஐயங்களைக் கூறி, கண்டு தெளிவுபடுத்திக் கொண்டான். பணியாளர்களைப் போற்றுவதில், பேணுவதில் நரசிம்மவர்மனுக்கு நிகர் அவனே தான். ஒரு மன்னன் இப்படி கீழ் நிலை பணியாளர்கள் வரை எல்லாமும் செய்வானா என்று வியக்கும் அளவுக்கு செய்யும் மன்னன். அதிகாரத்தினால் அவன் இவற்றை இடிக்கக் கூறவில்லை. ஆனால், அவன் நெஞ்சில் இருந்தது அன்பு...அன்பு...அன்பு...அன்பன்றி வேறொன்றுமில்லை.

தான் சரியாக விளக்கவில்லை என்பதை உணர்ந்ததும், ஓவியங்கள் வழியாக தன் கனவு நகரை அவர்களுக்குச் சொல்ல முடியும் என்று நம்பினான் அவன். அவசர அவசரமாக ஓவியக்கலை பயின்றான். அவன் பயின்றானா அல்லது அவனுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு கலையை மேம்படுத்தி விட்டார்களா எனும் அளவுக்கு வேகமாகப் பயின்றான்: அவர்களுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்தினான்.

இம்முறை சிற்பிகள் மிகவும் கவனம் கொண்டனர். ஏனெனில், அவர்களுக்கே இது ஒரு சவால். மீண்டும் சரியில்லை எனில் மீண்டும் உழைப்பு இடிபடும். தம் உழைப்பு தம் கண் முன்னால் அழிவதை எந்த உழைப்பாளனும் பொறுப்பதில்லை. எனவே, ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடந்தது. சிவ பெருமானை நோக்கி ஒரு நீண்ட தவம் செய்த பின்னரே வேலையை ஆரம்பித்தனர். இப்போது வேலை செய்யும் இடம் ஒரு தவச்சாலை ஆனது, ஆக்கியது மன்னனின் பிடிவாதம், இல்லை,,, தன் கனவின் மீதான நன்நம்பிக்கை..

தொடக்கத்தைல், சில நாட்கள் கனவுகள் பற்றி ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்படவில்லை நரசிம்மனுக்கு. இவை எல்லோருக்கும் ஏற்படுவது போல் மிக மிகச் சாதாரணமாகத் தோன்றி மறைகின்றன என்றே நினைத்தான். வெளியே சொல்லக்கூடத தயக்கமாக இருந்தது. இவற்றைப் பிறர் என்ன நினைப்பார்கள்? என்ற தயக்கம், தன் படை தளபதி, பட்டத்தரசி, தோழர்கள் என்று யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், செயல்படுத்த எண்ணினான். ஒரு மிகப் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால், பகலில் தூக்கம் வரவில்லை, இரவில், அதுவும், ஆழ்ந்த தூக்கத்தில், தான் செய்ய வேண்டிய செயல்களைச் சொன்னது போலத்தான் இருந்தது. முதலில் கவலை வந்தது. கனவுகள் வருகிறதென, பயந்தான். பின்நாட்களில் கனவுகள் எப்போது வரும் என்று ஏங்கினான்.

கனவுகளின் வாயிலாக, எத்தனை தொழிலாளர்கள் எந்த திசையிலிருந்து வருவார்கள். யார் யார் நல்ல பணியாளர்கள் என்பதெல்லாம் கூடத் தெரிந்தது. இறை பக்தியில் ஆழ்ந்த தன் முன்னோர்களால் தனக்கு ஏற்பட்ட நன்மை இது என்றே நினைத்தான்: பெருமிதம் கொண்டான். ஆனால், கனவுகள் வருவதை எவரிடமும் சொல்லவில்லை.

இரண்டாம் புலிகேசியை யாராவது வெல்ல முடியுமா? பெயரைக் கேட்டாலே புலியைப் பார்த்தது போல் பயந்து ஒதுங்கினார்கள் பல மன்னர்கள். வெளியிலோ தனக்கு அப்படி ஒரு ஆசை இல்லை என்றே பேசிக்கொண்டனர். ஒரு நாள் திடீரென்று வாதாபி கொண்டான் என்று ஒரு குரல் கனவில் கேட்டது. துள்ளி எழுந்து தூக்கம் தவிர்த்தான்,. “ இது இறைவனின் ஆணை....இறைவனின் ஆணை....என மனதுள் திடம் கொண்டான். படைவீரர்களை தயார் செய்தான். நம்பிக்கை வார்த்தைகளைக் கொடுப்பதிலும் அன்பை கொடுப்பதிலும் அவனுக்கு நிகர் அவனே தான். கடைசிப் பணியாளர் வரை தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அவனே மன்னன்.

தான் எடுத்துக் கொண்ட எந்தச் செயலிலும் கடைசிவரை உறுதி கொண்டான். ஏனெனில், கனவில் அவனுக்கு அது நடக்கும் என்று அழுத்தமாகக் கூறப்பட்டு விட்டது. எனவே, யார் மாற்றிச் சொல்ல வந்தாலும் அவர்களை ஒரு நிமிடத்தில் தன் கொள்கைகளுக்குள் நுழைத்து விடும் நுட்பமும் திட்பமும் பெற்றிருந்தான்.

இந்த விடாப்பிடியான அன்பாலும் ஓயாத உழைப்பாலும் கிடைத்தவர்தான் நிருபகேசரியின் மகன் பரமதுர்க்கன் ( வாதாபி போரில் துணை செய்த கொடும்பாளூர் வேளிர் குலத்தவர். வாதாபிஜித் என்றொரு அடைமொழியும் அவருக்குச் சொல்லப் படுகிறது.) அது நாள் வரை உதயணனை தலைமை சிற்பி என்றே எல்லோரும் கருதினார்கள். முதல் முறையாக சிற்பி நரசிம்மவர்மனை, அவன் வார்த்தைகளைக் கவனமாகவும் காதலாகவும் கேட்க ஆரம்பித்தான் உதயணன். தன் தொழிலை நேசித்து தன் தொழிலில் ஆர்வம் கொண்டு, அதன் அடி ஆழம் வரை பேசும், சிந்திக்கும் மன்னனை யாருக்குத்தான் பிடிக்காது? அப்படித்தான் நம்பிக்கை கொண்டான் உதயணன். ஆனால், அதுவரை இல்லாமல் மன்னன் சொன்ன புது யோசனை வியப்பாகவும், புதுமையாகவும், மாறுபட்டதாகவும் இருந்தது.

மன்னனின் அந்தக் கோரிக்கை சிற்பிகளுக்குப் புரியாத புதிர், அது நாள் வரை செங்கற்களால் கட்டுமானப் பணி நடப்பதுதான் நடைமுறை. ஆனால், மன்னன் விரும்பியதோ கருங்கற்களால்: அதுவும் மலையைக் குடைந்து விமானங்கள், விதானங்கள் அமைக்க வேண்டும் என்பது, அன்பும் , பணிவும் கொண்ட தலைமைச் சிற்பி உதயணனுக்கே இது ஆச்சரியம்...அதிசயம். இயலாதோ என்றும் ஒரு அயற்சி. ஆனால், மன்னர்தான் எதற்கும் சமாதானம் ஆகமாட்டாரே, சரி, தோல்வியை ஒத்துக் கொள்வோம் என்று தோன்றியது. அனைவருமே உடன்பட்டனர். தீவிரமான, பக்தியான நம்பிக்கையான முயற்சி, தோற்பதற்கு வாய்ப்பே இல்லை.

எப்போதும் ஒரு யோசனையுடன் அமர்ந்திருப்பது போல தோற்றம் அளிக்கும் அவனை, சிலர் மனதிற்குள் ஏசினர். என்றாலும், அனைவரும் தன்னோடு ஒத்துப்போகும் வரை கூட்டங்கள் நடத்தினான். அவர்களை இசைய வைத்தான். தன்னுடைய எண்ணங்களை அவர்களுக்குள் மடைமாற்றம் செய்தான். கொஞ்சம் கொஞ்சமாக சிற்பிகளுக்குள்ளும் அவன் கருக்கொண்டான்: உருக்கொண்டான்: விளைவு...கடற்கரையில் கலைநகரம் அரும்பியது.

அதுவரை மணல்வெளியையும் பாறைகளையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கடல் மகள், அழகான ரதங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்: அலைக்கரங்களைக் கொட்டி ஆரவாரித்தாள். இன்று வரை ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது அவளது ஆராவாரம். அந்த ஆராவாரத்தில், நரசிம்மவர்மனின் பெருமையல்லவா பாடப்படுகிறது. கனவுகள் எல்லோருக்குமே சில நாள் தொடரும். ஆனால், வாழ்நாளெல்லாம் வழிகாட்டியாக இருந்தது நரசிம்மவர்மனுக்கு மட்டும் தான்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிதாகத் தீர்வு கிடைத்தது. ஒரு செயலை யார் செய்தாலும் சாதாரணமாகச் செய்வார்கள். அதே செயலை அசாதாரணமாக செய்வோர் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். நரசிம்மவர்மன் இதற்கான உதாரணம்...


(காண்போம்)

********************************************************************************

Sunday, November 1, 2015

நேசிப்பே சுவாசிப்பாய்...

கனவுக்காட்சிகள்...கல்கியின்....தீபம்....07...கவிஞர் சுவாதி
*********************************************************



பிரியத்தின் தன்மையே, பிரியமானவர்களை, பிரியமான வடிவங்களில் மட்டுமின்றி, பிரியமற்ற உருவங்களிலும் கோர்த்துப் பார்ப்பது. அன்புக்கு மட்டும் எல்லையே இல்லை. அன்பு செய்யாமல் வாழ்க்கையே இல்லை. பிறப்பால் மருணீக்கியாராக இருந்து சமண சமயத்தைத் தழுவி தருமசேனராகி, திருநாவுக்கரசராய் சைவத்துக்குத் திரும்பியவர். சிவன் மேல் இருந்த பக்தியோ, தன் தந்தை சிவனடியார்களைத் தொழுததன் பயனோ தெரியவில்லை: அப்பூதியடிகள், சிவனடியார்கள் என்றால் உயிரையும் கொடுப்பார்: உயிராய் இருப்பார்:

திருநாவுக்கரசரின் வாழ்க்கை தெரிந்தபின் அவரின் பக்தர் ஆனார். தொண்டர் ஆனார்: அவராகவே ஆனார்; அந்த அன்பை இதற்கு மேல் விளக்க முடியாது. அன்பின் ஆற்றலை, அன்பு கொண்டவரின் முகத்தை, காணும் முகமெல்லாம் தேடுவது; செய்யும் தொழில், பேசும் பேச்சு எல்லாவற்றையும் அவரைப் போலவே ஆக்கிக் கொள்வது, அன்பு கொண்டோரை அன்பால் தடவுவது போலவே அவர் பெயர் கொண்ட எவரையும், எதனையும் நேசிப்பது.

அப்படித்தான் ஆக்கிக் கொண்டார் அப்பூதியடிகள். தன் மகன் பெயர் திருநாவுக்கரசு. தோட்டம் திருநாவுக்கரசு, வீட்டின் பெயர் திருநாவுக்கரசு, தான் வைத்திருந்த மாடுகளின் பெயர் திருநாவுக்கரசு, தான் நிர்வகித்த பால் விற்பனை நிலையம், மண்டபங்கள், என்று அவர் தொடர்புடைய எதுவும், எவரும் திருநாவுக்கரசு தான். மாடுகளைக் குளிப்பாட்டும் போது கூட திருநாவுக்கரசரின் நினைவு வந்து தலை சீவி, அன்பு சுரந்து அதனோடும் பேசிக் கொண்டே நீராட்டி விடுவார்.

இப்படி ஒரு அன்பு உலகில் இருக்குமா? இருந்தது. அது அப்பூதியடிகளின் அன்பாய் இருக்கும். பார்க்காமல், பேசாமல், அவரோடு எந்தவிதத் தொடர்புமின்றி இதெப்படி சாத்தியம் என்று விளங்கவில்லை. ஆனால், இதயத்தின் ஈர்ப்பால் தன் வாழ்நாளுக்குள் என்றேனும் ஒரு நாள் சந்தித்து விடுவது என்றும் முடிவெடுத்திருந்தார்.

அன்றாடம் அவருக்குள் எழுந்ததும் இதே சிந்தனைதான். “இன்றேனும் நான் திருநாவுக்கரசரைக் காண்பேனா?

ஏனெனில் , யாரிடம் அன்பு கொண்டுள்ளோமோ அவர்களிடம் தன் அன்பைத் தெரிவிக்கும் போது அவர்களிடமும் ஒரு அன்பு ஊற்றாகுமே....அந்த அன்பின் ஊற்றுக்கு இணை, அந்த இன்பத்துக்க இணை இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதுமில்லை.

அந்த அன்பை உரியவர்களிடம் சேர்பித்து விடுவது தான், அன்பு கொண்டதற்குக் கிடைக்கும் அங்கீகாரம். எனவேதான், அப்பூதி தனக்குள் எப்போதும் இதையே நினைத்தார்; இல்லை துதித்தார். ஒரு செயல் நமது நடைமுறையாய் மாறிவிடும் போது, அதனைப் பற்றிய செயல்பாடுகள் அதிகம் இருக்கும் என்பது தானே கடவுளின் கட்டளை.

அப்படித்தான், எந்தக் கதவுகளையும் தட்டாமல் அவர் ஒரு கனவு கண்டார். திருநாவுக்கரசரை அவர் சந்திக்கிறார். அவர் வீட்டில் திருநாவுக்கரசர் உணவு உட்கொள்கிறார். ஆனால், வாழை மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது, கண்ணீரோடு அவரும் அவர் மனைவியும் சிவனைத் தொழுகின்ற்னர். சிவனைத் தொழுததும் எல்லா வருத்தமும் மறைந்தது. பழையபடி கிழக்கில் சூரியன் தோன்றுகிறான். இது தான் அவருடைய கனவு.

அந்த வாரம் முழுவதும் அவருக்கு அதே கவலை எழுந்தது.”ஏன் வாழை மரம் அடியோடு சாய வேண்டும். ஆனால், சிவபெருமானும் கிழக்கில் சூரியனும் தோன்றியது நல்ல சகுனம் தான். ஆனால்....ஆனால்...? என்று தவித்தவர் கடைசியில் துள்ளிக் குதித்தார்.

யாருக்கு எல்லாப் பெயரும் சூட்டி, யாரை இவ்வளவு காலம் நேசித்தோமோ அவரைக் காணப்போகிறோம், அவரைக் கண்டுவிட்டால், இந்த உலகத்தில் அனைத்து துன்பங்களும் தூசிக்குச் சமானம் அல்லவா? வரும் நன்மையைப் பற்றி நினைக்காமல் தீமையை நினைத்த மனம், புழுங்கிய தன் மடமையை தானே கடிந்து கொண்டார். நொந்து கொண்டார். இப்படித் தோன்றியதும் மனம் துள்ளியது.

கனவில் அவர் முகத்தைச் சரியாகக் காண முடியவில்லை. நேரில் பார்க்க ஆவலும், ஆசையும் அதிகமாகியது. மனைவியிடமும் கனவைச் சொல்ல வில்லை. சொன்னால் வருந்துவாள். தான் செய்யும் செயல்களில் ஏதும் குறை ஏற்பட்டதோ, அதனால் தான் தனக்குக் கனவிலும் கூட தரிசனம் இல்லையோ என்று மயங்குவாள், எனவே, அவளிடம் சொல்லத் தயக்கமாய் இருந்தது.

எப்போது பார்ப்போமோ என்று ஏங்கிய மனதுக்கு எப்போதேனும் பார்ப்போம் என்று ஒரு விடை கிடைக்கிறது. ஆனாலும், கேள்வி எழுகிறது. எப்போது காண்போம் என்று. அது இன்ராய் இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் துடிக்கிறது.

அப்படித்தான் அன்று காலையில் இருந்தே ஏதோ ஒரு பரபரப்பு அப்பூதிக்குக் காணப்பட்டது. என்னவென்றே சொல்ல இயலாத உற்சாகம் தென்பட்டது. மனசுக்குள் சிறகு முளைப்பது போலவே இருந்தது. என்ன உணர்வென்று புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினார். தன்னை நினைத்து தனக்கே ஆச்சரியமாய் இருக்கிரது. ஒருவரின் மேல் கொண்ட அன்பு வற்றாமல் பெருகுமா? அதுவும் பார்க்காமல், பேசாமல், ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பிக் கொள்கிறார்.

மறைமுகமாக வேறொன்றும் நடந்திருக்கிறது. அவருக்கு மன ஈடுபாடு இல்லாமல் செய்த சில வேலைகள் திருநாவுக்கரசு என்ற பெயரால் காப்பாற்றப் பட்டன. மேலும் ஓங்கின. அந்தந்த இடத்தில் பணி புரிந்த ஊழியர்கள் தங்கள் விசுவாசத்தைக் காட்ட தாங்களும் திருநாவுக்கரசு என்று பெயர் மாற்றிக் கொண்டு மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தனர்- தம் எஜமானரின் கவனைத்தைக் கவர.

இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் சிவனடியார் ஒருவர் வருகிறார். அன்பு கொண்ட முகத்துரன். வந்தவரை வரவேற்று, “இன்று இங்கே சாப்பிட வேண்டும் “ என்று வேண்டுகோள் வைத்து விட்டு முகம் பார்க்கிறார். வந்த சிவனரியாரின் முகத்தில் கேள்விகள். அது வார்த்தைக்யிலும் வெளிப்பட்டது.

“உமது தொழில் நிறுவனங்களில் உம் தந்தை பெயரோ, உம் பெயரோ அன்றி வேறு ஒருவர் பெயர் ஏன் வைத்தீர்?” என்று மறு நிமிடம் கோபம் வந்தது அப்பூதிக்கு. தன் உயிரினும் மேலான திருநாவுக்கரசரை யாரோ ஒருவர் என்பதா? தன் உயிரை வேறு ஒருவர் என்று சொல்ல முடியுமா? அதை நினைத்தால், கேட்டால் தாங்குமா?

“தரும சேனராயிருந்து சிவனின் அன்பால் மாறிய திருநாவுக்கரசரை அப்படிச் சொல்லாதீர்கள். சிவனடியார் என்பதால் தப்பித்தீர்” என்றார் சினத்துடன் அப்பூதி. “ சூலை நோய் வந்து திருநாவுக்கரசரான சிறியவன் அடியேன் தான்.” அன்று உரைத்தார் வந்தவர்.

நாவுக்கரசரைத் தரிசிக்கப் போகிறோம் என்கிற கனவு பலிதமானதில் ஆனந்தம் அப்பூதி அடிகளுக்கு.(வம்சத்தை தழைக்க வைக்க வந்த வாழை மரமான மைந்தன் பாம்பு தீண்டி இறந்து பட, நாவுக்கரசர் பாட சிவனருளாலே அவன் மீண்டெழுந்ததும் நான் ஏற்கெனவே அறிந்ததுதானே!) நடக்கக்கூடிய கனவுகள் முன்னாலேயே தோன்றும் என்பதற்கு, அப்பூதியடிகளின் கனவு ஆனந்தமான ஆதாரம்.

(காண்போம்)

****************************************************************************888


Friday, October 30, 2015

யாதுமாகி நின்றாள்.

கல்கியின் தீபத்தில்....கனவுக்காட்சிகள் தொடர்...06...கவிஞர் சுவாதி
*********************************************************************

அரண்மனை முற்றத்தில் அமர்ந்திருக்கிறாள் ஜீஜாபாய். அவள் முகத்தில் அசாதாரண கம்பீரமும், நிறைவும் ததும்பியிருந்தன. ராஜமாதா என்ற எல்லோரும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.மைந்தனோ, அன்னையின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல், அவள் கருத்தை நிறைவேற்றுகிறான். இப்படியொரு மகனை பெற்ற மணி வயிறு எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எல்லோரும் போற்றுகிறார்கள்.

மலை எலி என்று கேலி செய்தவர்கள் எல்லாம் திக்குத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். அப்சல்கான், செயிஷ்டகான் என்று எதிரிகளால் அனுப்பப்பட்ட வஞ்சகர்கள் மடிந்த பிறகுதான், எதிரிகளின் ஆர்ப்பாட்டம் அடங்கியிருக்கிறது. ம், என் மகன் இப்போது சத்ரபதி. ஆனாலும், அதே பண்பு, அதே பாசம், அதே அடக்கம், நான் கொடுத்து வைத்தவள் தான்.” தன்க்குள்ளாகவே முணுமுணுத்தாள் ஜீஜாபாய்.

எந்தத் தாய்க்கும் இல்லாத அல்லது ஒரு சில தாய்களுக்கே அமைகிற , கிடைக்கிற பெரும் பேறு ஜீஜாவுக்குக் கிடைத்தது. தன் மகன் சிவாஜியை மகனாய் மட்டுமல்ல, தோழனாகவும் பார்த்தாள். யாருமற்ற பெருவெளியில் அவளோடு பேசுவதும், அளவளாவுவதும் சிவாஜியும் அன்னை பவானியும்தான்.

மராட்டிய மாநிலத்தில்,லோகோஜிராவ் ஜாதவின் மகளாகப் பிறந்த ஜீஜாபாயின் கணவன் ஷாஹாஜி போஸ்லே,பீஜப்பூர் சுல்தானான அடில்ஷாவின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னன், ராணுவத் தளபதி, நம்முடைய மக்களன்னிய ஆட்சிக்கு ஆட்பட்டிருப்பதா? அதற்கு தன் கணவவே துணை செல்வதா?”என்றெல்லாம் ஏராளக் கேள்விகள் ஜீஜாவுக்கு, என்ன செய்ய? ஆனால், தன்னுடைய குழந்தைகள் அப்படி இருக்ககூடாது என்று தீர்மானித்தாள். ஆனால் விதி அவளுக்கு எதிராக பலசோதனைகளைச் செய்தது. ஆறு பெண் குழந்தைகள், இரண்டு மகன்கள் என்று பிறந்தும், பிழைத்தது இரு மகன்கள் மட்டுமே.

(காலப்போக்கில்,மூத்தவன் தந்தையாருடனும், இளையவன் சிவாஜி அம்மாஜீஜாவுடனும் வள்ர்ந்தார்கள்.ஷாஹாஜி இன்னொரு பெண்ணை மணந்தார். அவள் மூலம் பிறந்த குழந்தைகள் தான் தஞ்சையில் மராட்டியர் ஆட்சிக்குக் காரணம் என்கிறது வரலாறு)

சிவாஜிக்கு ஒரு பழக்கம். தனக்கான வெற்றியையும் தனக்கான சோகத்தையும் முதலில் தன் அன்னையிடம் தான் சொல்வான். அப்படிப் பழக்கினாள் என்பதைவிட,அன்னையே தோழியானால், சொல்வதில் என்ன தடை? அப்படித்தான் ஒரு நாள்...

”அம்மா நான் வெற்றி பெற்றேன்” என்று நிலங்களின் பெயர்களை அடுக்குகிறான் அன்பு மகன். அன்னை திரும்பாமல் வேறெங்கோ பார்ப்பதைக் கண்டு அவன் மனம் பதைக்கிறது. “தவறாகச் சொல்கிறேனா?” சிவாஜிக்குக் குழப்பம். “என்ன ஆயிற்று அம்மாவுக்கு? ஏதும் கோபமா? பல்வேறு கேள்விகள் மனத்தில் புரள, மீண்டும் கேட்கிறாள்.

“அம்மா நான் ச்ல்கிறேன்: நீங்கள் வேறெங்கோ பார்க்கிறீர்கள்.என் தோழி, என் தாய் என்பதைவிடஎன் தெய்வம் இல்லையா நீங்கள்? என் தெய்வம் என்னைப்புறகணிக்கலாமா” கேட்கும் போதே அந்த மாவீரனின் கண்கள் கலங்குகின்றன. வீரர்கள் உடலால் திடமானவர்கள். ஆனால், அவர்களையும் இதயத்தோடு தானே இறைவன் படைத்தான்?

ஜீஜாபாய்க்கு மகனின் தழுதழுத்த குரல்கேட்டது. சாளரத்தருகே மகனை அழைத்தாள். தொலைவில் கையைக் காட்டி,”எனக்கு அது வேண்டும்” என்றாள். அவள் காட்டிய திசையில், மிகப்பலமானதும் பாதுகாப்புமான சதாரா கோட்டைகள் தென்பட்டன. அதைப் பார்த்த மறுகணம், சிவாஞி சொன்னான்.

“ அம்மா விரைவில் அவை உங்களுடையதாயிருக்கும்.” ஆம், சொன்னபடியே செய்யவும் செய்தான். அடுத்த சில நாட்களில் அவற்றையும் வெற்றி கொண்டான். அன்னைக்கு முகமெல்லாம் புன்னகை, பெருமிதம்.” என் வளர்ப்பு...என்று மனம் துள்ளியது.

இப்படியெல்லாம் சிவாஜியைப் பக்குவப்படுத்த அமைந்தது ஒரு கனவு தான். எல்லோரும் கனவாய் போகும் வாழ்வை வாழ்வார்கள். அவள் தான், முதன் முதலாக, கனவில் இருந்து வாழ்வை பக்குவமாகப் பிரித்தெடுத்தாள். அந்தக் கனவை திடப்படுத்தினாள்.நிறம் கூட்டினாள்.உரம் ஊட்டினாள்.

அவள் கண்ட கனவு இது தான்.” அவளுக்குச் சொந்தமான ஆடையை வேறு யாரோ அணிகிறார்கள். மிகச் சிறியதாகக் காணப்பட்ட விளை நிலத்தில் புதிய புதிய பயிர்கள் பற்பல முளைத்து கண்களுக்கு எட்டும் வரையில் வயல்வெளிகள் விர்கின்றன. மாடுகள் ஒரு பக்கம் பயிரை மேய்ந்தாலும், மீண்டும், மீண்டும் அசுர வளர்ச்சியாய் பயிர்கள் வளர்கின்றன.

இவ்வளவுதான் அவள் கண்ட கனவு, என்ன பொருள் இதற்கு? யாரிடம் விளக்கம் கேட்பது?கேட்டுக் கேட்டுகுழம்பிப் போனது மனம்: குலைந்து போனது அறிவு.

தங்கள் மத குருவிடம்சொல்ல நினைத்து, வேண்டாம் என்று முடிவு செய்கிறாள். பிறகு தோழியரிடம் சொல்லலாமா என யோசனை .பிறகு தன் கணவனிமே சொல்லலாமாஎன்றும் எண்ணம். கடைசியில் யாரிடமும் சொல்லவில்லை: கேட்கவும் இல்லை தானே மீண்டும் தன் கனவை ஆய்வு செய்து பலன்கள் உணர வேண்டுமென நினைக்கிறாள்.கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.

தன்னுடைய ஆடையை இன்னொருத்தி அணிகிறாலென்றால், தன் உரிமை பங்கு போடப்படும் சூழல் வருகிறது என்று புரிந்தது. அவள்கணவன் இன்னொரு பெண்ணை மணக்கப் போகிறான். தனக்கு சமதையாக இன்னொருத்தி வரப்போகிறாள் என்று உணர்த்தியது அறிவு.

அது மட்டுமல்ல: மிகச் சிறியதான  தான் வாழும் பகுதி, அன்னியர் பிட்யிலிருந்து விடுபட்டு, மேலும் விரிவடையும்: அத்தகைய வளர்ச்சியை எதிர்ப்புகளை மீறிய வெற்றியை என் மகள் அடைவான் என்றெல்லாம் அர்த்தப்படுத்திக் கொண்டாள். அதற்கேற்ப தன் மகனை உருவெடுக்கச் செய்ய வேண்டுமென்றும் தீர்மானித்தாள்.

“ என் மகன் எனக்குக்கிடைத்த பொக்கிஷம், அவன் விளையாட்டுப் பொருள் அல்ல> விளையாடப் பிறந்தவனும் அல்ல. வினையாற்றப் பிறந்தவன். நிச்சயம் அவன் வெற்றி பெறுவான்.தோல்விகளில் கற்றுக்கொள்வான். ஒவ்வொரு முறையும் மீண்டெழுவான், என்று உறுதியாக நம்பினாள். அவனை பண்புள்ளவனாக, பாரம்பரியத்தை மதிப்பவனாக, கலாசாரத்தை மீட்டெடுப்பவனாக வளர்த்தாள்.

சிவாஜி தன் வெற்றிகளாலவள் மனதை நிறைக்கும் போதெல்லாம், அந்தக் கனவின் துளிகள் அவளை கொஞ்சமேனும் சலனப்படுத்தாமலில்லை. அன்பு என்பது திடமானது தான். ஆனால், அவை தரும் உணர்வுகள் அதற்கு மாறானதல்லவா? அதனால் தான் மாவீரன் என்றுபோற்றப்பட்ட சிவாஜி அன்னையிடம் குழைந்தான். எவ்வளவு வளர்ந்தாலும், அன்னைக்கு முன் குழந்தைதானே?

அந்த மாதா, பிதாவாகி நின்றாள். குருவாகத் தோன்றினாள்.எனவே, தெய்வமாகவும் மாறினாள். உலகின் அன்புகளை ஒரு பக்கமாய் வைத்தாலும் ஜீஜாவுக்கு இணையில்லை.இந்தப் பிணைப்பும் பிரியமும் இயல்பானதா?தோற்றுவிக்கப்பட்டதா? ஏற்படுத்தி வைத்ததா? யாருக்கும் தெரியாத அற்புதம்.

கனவின் நெடி அடிக்கடி வந்து ஜீஜாவை கலைக்கும். அவளேகூட மயங்கியிருக்கிறாள். “என்னால் முடியுமா? நான் அப்படி வாழ்வேனா” என்று .அவள் கண்ட கனவு அந்த இரவு தந்தது. அந்தக் கனவை பிற கனவோடு ஒப்பிட்டு துச்சமாக ஒதுக்கியிருந்தல்..?

வரலாறு வாடிப்போயிருக்கும், ராஜ்கர், சிந்துதுர்க், சதாரா கோட்டைகளின் பெருமை என்று சொல்லிக் கொள்ள ஏதுமிருக்காது. சத்ரபதி, என்ற சொல் வார்த்தையாகவே வலுவிழந்து நின்றிருக்கும். ஆனால், காலம் காத்திருந்தது. அவளை வரவேற்று பூத்தூவி புளகிப்பதற்காக,அதுதான் ஜீஜாவுக்கு கனவாக வந்து காட்சி பட்டது.கணவன் இறந்ததும் தானும் உடன் கட்டை ஏறியிருந்தால், மகன், “சத்ரபதி” ஆன வைபவத்தை பார்த்திருக்கத்தான் முடியுமா?

அந்திம காலத்தின் அந்திப் பொழுதில், தான் கண்ட கனவை, அது என்னவென்று அறிய தான் பட்ட இன்னல்களையும் நினைத்து உணர்ச்சிமயமாய் நின்று கொண்டிருந்தாள் ராஜமாதான்வான ஜீஜாபாய்.

“தங்கள் தனைமையை கலைத்து விட்டேனா?” எப்போதும் மனததை நிறைக்கும் சங்கீதம் போன்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் கனவே உயிர் பெற்றதாக, எதிரே நின்று கொண்டிருந்தான்,அவளின் அன்பு மகன் - மராட்டிய மண்டலத்தின் மன்னன் , மாவீரன் சிவாஜி.

காண்போம்...

****************************************************************************