Tuesday, June 3, 2014

இன்று என் பள்ளி

   இன்று போனதும் கையைப்பிடித்துக்கொண்டே என்னை வரவேற்ற மனோஜா நான் இதழ் பிரித்து புன்னகை செய்யுமுன் நற்காலை வணக்கம், வாழ்க வளமுடன் என்றாள். என்னது ?என்றேன். உங்களுக்கு தமிழ் பிடிக்குமே என்று குட்மார்னிங்கை தமிழில் சொல்லி வாழ்த்தினேன் என்றாள்.

 எனது கைப்பையையும் சாப்பாட்டுக் கூடையையும் வலுக் கட்டாயமாக பிடிங்கிக் கொண்டாள். எனது கையைப் பிடித்துக் கொண்டே எந்து வகுப்பறையின் வாசல் வரை வந்தவள், நேற்று என்னைப் பற்றி “பேச்சு புக்கு லயும் புலாக்கு லயும் எழுதினீங்களா? என்றாள். நானோ இவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாமல் ‘திரு திரு’ வென விழித்தேன். வழக்கமாக அவர்கள் தான் என்னுடைய கேள்வி நேரங்களில் மரியாதையாக விழிப்பது வழக்கம். ( அதாங்க திரு திரு னு) இன்று நான்.

   மீஸ்- பேச்சு புக்கு -டூவீவீட்டரு- புலாக்கு என்றாள். அழுத்தி. எனக்கு சரெலென உரைத்தது.  இவள்  face book, twitter, blog  பற்றித்தான் பேசுகிறாள் என்று புரிந்தது. நேற்று அவள்தான் மாணவர் தலைவி என்று தேர்ந்தெடுக்கப்பட்டதுமே அவளாக வந்து என் கையைக் குலுக்கி வாழ்த்துக்கள் கூறிய போதும் இன்று என்னைக் கண்டதும் நற்காலை வணக்கம் என்று எனக்கு முகமன் கூறியதும் என்க்கு ரொம்பப் பிடித்தது.

 தற்போது ஃப்ஸ்புக், பிளாக், என்றெல்லாம் சொல்லவும் ( உச்சரிப்பு சரியில்லாவிட்டாலும் தெரிந்திருக்கிறதே என்ற உணர்வு) எனக்குள் பூக்கள் சொறிந்து கொண்டிருந்தது.

   இவள் தான் சென்ற ஆண்டு என் பிறந்த நாள் அன்று மின் விசிறியில் பூக்களைக் கொட்டி என்னை வரவேற்று வாழ்த்தியவள். ( பார்க்க எனது முந்தைய பதிவுகள் ) இவர்களுக்காக இன்னும் நான் அதிகமாக சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அன்பு கலந்த சிரத்தையுடன் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்கு வழங்கி வருபவர்கள். .

   நான் அவளைக் கூப்பிட்டு அது பேச்சு புக்கு இல்லை ஃபேஸ்புக் என்றும் புலாக் இல்லை பிளாக் என்றும் சொன்னேன். சிறு பிள்ளைக்குச் சொல்லித் தருவது போல். உடனடியாக அவள் அதுல தானெ எல்லோரோடயும் பேசுறீங்க அப்ப அது பேச்சு புக்கு தானே என்றாள் அவளுடைய சாமளிக்கும் திறனை நான் வெகுவாக ரசித்தேன். இப்போது அவளை இன்னும் நேசிக்க ஆரம்பித்து விட்டேன். சரி. இன்று தான் பாடம் தொடங்க கூடாது என்றாளே, சரி என்ன செய்யலாம்? வகுப்பு நேரத்தை கண்டிப்பாக வீண் செய்யக்கூடாது. செய்ய மாட்டேன். அதற்கு அனுமதி இல்லை என்றேன். இதன் வழியாக. அவர்களுக்கு வேலையின் மகிமையையும் பொறுப்பில் கடமை, நெகிழ்வு தன்மையிலும் நேர்மை, போன்றவற்றைக் கற்று கொடுக்க நினைத்தேன்.

   இன்று முதலில் நான் கால அட்டவணை தயார் செய்ய வேண்டும். பிரிவேளைகளில் யார் யார் என்ன வகுப்பெடுப்பது போன்ற பல நிர்வாக வேலைகள் இருந்த்தன.( இன்னும் பள்ளி விட்டு செல்லும் மாணவர்களுக்கு டி.சி வேறு எழுதி வழங்க வேண்டும்.

   இன்று கால அட்டவணை தயார் செய்து விடுவீர்களா? என்றாள். ஆமாம் என்றேன். அதில் விளையாட்டுப் பிரிவேளை தினமும்  அரைமணி நேரம் வேண்டும், வாரம் இருமுறை, பாட்டு, கதை, நடனம், பேச்சு போன்ற பாடம் அல்லாதவை வேண்டும் என்றாள்.

   சென்ற ஆண்டு தயார் செய்திருந்தலில் வாழ்க்கைக் கல்வி என்ற பெயரில் பெண்கள் மலர், வாரம்லர், சுட்டிவிகடன்,மங்கையர் மலர், போன்றவைகளில் வரும் எளிய கைவினைப் பொருட்ட்கள் செயல்பாடுகள் போன்ற சில வை மட்டும் ( எங்களுக்கு பிடித்ததாகவும் எளிய தாகவும் இருப்பதை மட்டும் ) சொல்லிக் கொடுத்து வந்தோம். என்க்கும் அவளீன் ஐடியா சரியெனப் பட்டது. ஓகே. டன். என்றேன்.

   ஆனால் எனக்கு நீங்களும் ஒரு உத்திரவாதம் தர வேண்டும் அது போன்ற வகுப்புகளில் அதிகமாக சப்தமிடுவதும் கட்டுப்பாடின்றி அலைவதும் பேசுவதும் தவிர்க்கப் படவேண்டும் என்றேன். உடனே தனது வலது கையைத்தூக்கி கட்டை விரலை உயர்த்தி ஒரு கண்ணை மட்டும் சுருக்கி ஓ.கே.டன் என்றாள்.

   அப்போது தானே நானும் ஓகே. டன் என்றேன் . உடனே அவளும் ஓகே டன் என்கிறாளே என்று எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.

   நேற்று அவள் தான் தலைவி என்று அறிவித்த போது மற்ற வகுப்புப் பெண்கள் அவளைத் தூக்கி ஹேய் என்று சப்தமிட்டார்கள் அல்லவா? இன்று நான் எனது புகைப்படக்கருவியை சரி செய்து விட்டதால் ( காலையே அதனைக் கேட்டு உறுதி செய்து கொண்டு விட்டாள்)மீண்டும் அந்த மாணவிகளைத் தூக்கச் சொல்லி புகைப்படம் எடுக்கச் சொன்னாள். நாங்கள் எடுத்துக் கொண்டிருந்த போதே, இன்று வருகிறேன் என்று சொல்லி ப் போன எங்கள் தலைவர், வாக்குத் தவறாமல் வந்து விட்டார்.  புத்தகம் கொடுப்பது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவற் சிறியதாக சிற்றுரை என்ற பெயரில் ஒரு அழகான பேருரை வழங்கினார். நல்லாபடிச்சு பெரிய ஆளா ஆகணும் என்பதை பற்பல வார்த்தைகளில் மிகத்தெளிவாக விளக்கினார்.

   இன்று மறக்காமல் ஃபேஸ் புக்கிலும் பிளாக் கிலும் எழுதிவிடுங்கள் என்றாள் ஒரு ‘ஆணை’ போன்ற தொனியில். தான் சொல்வது சரிதானா என்று மீண்டும் ஒருமுறை ஃபேஸ்புக், பிளாக் என்று சொல்லிக் கொண்டாள்.  அப்படியே  ஆகட்டும் என்றேன். எழுதிவிட்டேன். நாளை எத்தனை லைக், எத்தனை கமெண்ட் என்று கேட்டாலும் கேட்பாள். அவளையும் மற்றும் என் மாணவர்கள் அனைவரயும் நலமோடும் வளமோடும் பிரச்சனைகளை எதிர் கொள்ளவும், சாமாளிக்கவும், தெளிவு பெறவும் வாழ்த்துங்கள்.

பின்குறிப்பு  .:





இது ஒரு குக்கிராமம். தொலைக்காட்சி பெட்டி தவிர வேறு பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அறியாதவர்கள் இந்த மக்கள். நான் உதவி ஆசிரியரோடு பேசுவதையும் அவர்களிடம் உங்களைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளேன் என்பது பற்றி கேட்டுக்கேட்டே அவள் இந்த அழகிய அறிவைப் பெற்றுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது



5 comments:

  1. பதிவை தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா...?

    நான் இணைத்து விட்டேன்... +1 நன்றி...

    ReplyDelete
  2. தொழில் நுட்பங்களை எளிதில் புரிந்து கொள்ளும் திறம் படைத்தவர்கள் குழந்தைகள். வசதியும் வாய்ப்பும் இருந்தால் சிறப்பாகவே செயல்படுவார்கள்.
    கல்வி ஆண்டின் நல்ல தொடக்கம். சிறக்கட்டும் உங்கள் பணிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நீங்கள் ஆசிரியரா!? மனோஜாவா!?

    ReplyDelete
  4. சுட்டிகையான மாணவி! சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 8:40 PM

    டூ லேட். உங்களிட்ம் நான் படிக்க ஆசைப்படுகிறேன்

    ReplyDelete